ஹே சென்னை தப்பிச்சிடுச்சி! ஏன் தெரியுா? வெதர்மேன் கொடுத்த கூலிங் நியூஸ்
சென்னை: கடல் காற்று சீக்கிரமாக வீசத் தொடங்கிவிட்டதால் இன்று தகிக்கும் வெயிலில் இருந்து சென்னை தப்பிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயில் அன்றாடம் மக்களை போட்டு வாட்டி வதைத்து வந்தது. இதனுடன் கத்தரி வெயிலும் சேர்ந்து கொண்டு தாளித்து எடுத்தது. இந்த நிலையில் இன்றுடன் கத்தரி வெயில் முடிகிறது. இதனால் தமிழகம், புதுவையில் வெப்பநிலையில் ஒரு டிகிரியோ அல்லது அதற்கு மேலே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து மக்களுக்கு இதமான சூழலை அளித்தது. இந்த நிலையில் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (மே 29) முதல் ஜூன் 1-ம் தேதிவரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 31-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும், ஜூன் 1-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையின் வெப்பநிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் அளித்த பேஸ்புக் போஸ்ட்டில் கூறியிருப்பதாவது: சென்னையில் இன்றைய தினம் கடல் காற்று மிகவும் விரைவாக வீசத் தொடங்கிவிட்டது. இதனால் கடற்கரைக்கு அருகே இருக்கும் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் தகிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்கும்.

சென்னையின் மேற்கு புறநகர் பகுதிகள், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி சென்டிகிரேட்டுக்கு வெப்பம் வாட்டி எடுக்கும். அது போல் கேரளா, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடியின் உட்பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருக்கும். இவை எல்லாம் வெப்பச்சலனத்தால் பெய்யும் மழை. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அது போல் வெதர்மேன் குஜராத்தில் பெய்யும் மழை நிலவரம் குறித்தும் கூறியுள்ளார். அகமதாபாத்தில் ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் நேற்று மழை பெய்தது. இந்த நிலையில் இன்றைய தினம் போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது போல் பாகிஸ்தானிலும் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications