இன்று தமிழ்நாட்டில் வானிலை என்ன? எங்கெல்லாம் மழை பெய்யும்.. சுட சுட வந்த வெதர் ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று சில மாவட்டங்களில் லேசான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. சென்னை, உள் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை பெய்து வந்தது. முக்கியமாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.
முக்கியமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது.
கொடைக்கானல் மலையில் பலத்த மழை மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. மக்களுக்கு எச்சரிக்கை!
சென்னை
சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தது. அதேபோல் நேற்று டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் விடாமல் மழை பெய்தது. இதனால் நேற்று பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
காவிரி
தமிழ்நாடு மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தென் மாநிலங்களில் தீவிர மழை பெய்து வருகிறது. முக்கியமாக கர்நாடகா, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெங்களூர், பெங்களூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நேற்று நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு மழை காரணமாக அதிகரித்தது.
வெள்ளம்
நேற்று இந்த அளவு 1 லட்சத்து 51 ஆயிரத்து 893 கன அடியாக அதிகரித்தது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், ஆற்று பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி ஆற்று ஓரம் இருந்த 1060 மக்கள் வரை பல்வேறு இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் பாலாறு உள்ளிட்ட தமிழ்நாட்டின் மற்ற ஆறுகளிலும் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மழை கொஞ்சம் குறைந்தது.
மழை
நேற்று மாலைக்கு பின் சென்னையில் பெரிதாக மழை பெய்யவில்லை. டெல்டா மாவட்டங்களிலும் இன்று இதுவரை மழை பெய்யவில்லை. இந்திய வானிலை மைய அறிக்கைபடி, இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.