"நோ மழை.. ஒன்லி வெயில்.." தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் வதைக்கும்.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் மாநிலத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்துவிட்ட போதிலும், இன்னும் பருவமழை இங்கே முழுமையாக ஆரம்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தாலும் மாநிலத்தில் முழுமையாக மழை பெய்யவில்லை.

நாட்டின் பிற மாநிலங்களில் தீவிர கனமழை கொட்டி தீர்க்கும் போதிலும் தமிழ்நாட்டில் பெரியளவில் மழை இல்லாமலேயே இருக்கிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் (ஜூலை 28) நாளையும் (ஜூலை 29) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல வரும் ஜூலை 30 முதல் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பம்: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பம் குறைவாக இருந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் வெப்பம் சற்று அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 28) நாளையும் (ஜூலை 29) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும், கோவை பகுதிகளில் கணிசமாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நடுவட்டம் (நீலகிரி), க்ளென்மார்கன் (நீலகிரி) தலா 30 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல கோவையில் சின்னகல்லாறு, வால்பாறை சின்கோனா உள்ளிட்ட இடங்களில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்று (ஜூலை 28) முதல் ஜூலை 30 வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதியைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், நாளை ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications