அசத்திட்டாங்க இஸ்லாமியர்கள்.. இதான் எங்கள் தமிழ்நாடு.. நாட்டுக்கே உதாரணமாய் மாறிய தஞ்சாவூர் திருவிழா
சென்னை: கடந்த 2 நாட்களாகவே, இஸ்லாமிய சகோதரர்கள் தமிழகத்தையே அசரடித்து கொண்டிருக்கிறார்கள்.. இது தொடர்பான செய்திகளும், வீடியோக்களும்தான் இணையத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன.
மதுரையில் உலகப்பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடந்து வருகிறது.. இந்த தோரோட்டத்தை நேரில் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்..

பக்தர்கள் : இந்த பக்தர்களின் தாகத்தையும், பசியையும் போக்கும் வகையில் மாசி வீதிகளில் ஏராளமானோர் உணவுகளை வழங்கி சிறப்பித்துள்ளனர்.. சர்க்கரை பொங்கல், புளியோதரை, நீர் மற்றும் நீர் மோர், ரோஸ்மில்க் என பந்தல்கள் அமைத்து பக்தர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
அந்தவகையில், மதுரை மேலமாசி வீதியில் தமிழ்நாடு பைப் டிரேடர்ஸ் அசோசியேஷன் சங்கத்தின் சார்பில், அதன் நிர்வாகி சலீம் முகமது, பக்தர்களுக்கு ரோஸ் மில்க் வழங்கினார்..
கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவே, பக்தர்களுக்கு சலீம் முகமது ரோஸ் மில்க் வழங்கி வருகிறாராம்.. இந்து முஸ்லீம் பேதமின்றி ஒற்றுமையாக இருப்பதாகவும், திருவிழாவில் பங்கேற்று ரோஸ்மில்க் வழங்குவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சலீம் முகமது கூறியிருக்கிறார்.
தஞ்சாவூர்: அதுபோலவே, தஞ்சாவூரிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. பேராவூரணியில் அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவின் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பேராவூரணி இஸ்லாமிய நண்பர்கள் சார்பில், பழங்கள், குளிர்பானங்கள், மோர் பாக்கெட், தண்ணீர் பாட்டில் அடங்கிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பைகள் பக்தர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த தாம்பூலம் பைகளை இஸ்லாமிய நண்பர்கள், இந்துக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.. அதில் பையின் மேல், "பேராவூரணி நகர், முடப்புளிக்காடு, ஏந்தல், அருள்மிகு நீலகண்ட பிளைளையார் ஆலயம் சித்திரை பெருந்திருவிழா" என்று மேல்பகுதியிலும், அன்புடன் இஸ்லாமிய நண்பர்கள் பேராவூரணி என்று கீழ்ப்பகுதியிலும் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
அரவணைப்பு: இந்து கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட அந்த பையில், இஸ்லாமிய சகோதரர்களை ஒருவரையொருவர் அரவணைத்தபடி போட்டோவும் இடம்பெற்றுள்ளது. அந்த தாம்பூல பையில், ஒரு வாட்டர் பாட்டில், ஒரு பிஸ்கட் பாக்கெட், 1 மோர் பாக்கெட், 1 கூல் டிரிங்க்ஸ் பாக்கெட் போன்றவற்றை வைத்து, பக்தர்களுககு விநியோகித்து வருகிறார்கள்.
மேலும், காவடி எடுத்து வரும் இளைஞர்களுக்குப் பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்ட மேடையில் சிறப்பான வரவேற்பு தந்தனர்.. மொத்தத்தில் சித்திரை பெருவிழாவானது, இஸ்லாமியர்களின் நெகிழ்ச்சி செயலால், மதநல்லிணக்க விழாவாகிவிட்டது.
நேசம்: எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும், சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதாபிமானமும், ஈரம் கசியும் இதயமும் இங்குள்ளவரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இதுபோன்ற "சகோதர உறவுகள்" நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன...
மத மாற்றங்களை புறந்தள்ளிவிட்டு மனித மனங்களும் ஒன்றுபட்டு கொண்டிருக்கின்றன.. தழைத்தோங்கட்டும் மனித நேயம்..!!! அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்..!!!












Click it and Unblock the Notifications