தட்கல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா? ரயில்வேயின் புது ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க.. இனி ஓடிபி கட்டாயம்
சென்னை: ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஓடிபி கட்டாயமாக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது முன்பதிவு செய்பவரின் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால் தான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். முதல் கட்டமாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த வசதியானது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும் விரைவில் அனைத்து ரயில்களிலும் அறிமுகம் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். ரயில்கள் குறித்த நேரத்திற்குள் சென்றுவிடும் என்பதாலும், கழிப்பறை வசதி இருப்பதனாலும் அதிக பயணிகள் பஸ்சை விட ரயில்களில் செல்லவே விருப்பப்படுகிறார்கள்.

தட்கல் டிக்கெட் புக்கிங்
ஆனால் ரயில்களில் போதிய டிக்கெட் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. நாம் அடுத்த மாதம் பயணம் செய்ய வேண்டும் என்றால் இப்போதே டிக்கெட் புக் செய்து வைத்தால் தான் டிக்கெட் கிடைக்கின்றது. அதிலும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் முன்பதிவு தொடங்கிய உடனேயே டிக்கெட் விற்று தீர்ந்து விடுகின்றன.
இதனால் அவசர தேவைகளுக்காக ஊருக்கு செல்ல நினைப்பவர்களின் வசதிக்காக தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி நாளைக்கு நாம் பயணம் செய்ய திட்டமிட்டோம் என்றால் இன்று காலை 11 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆனால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் கூட டிக்கெட் கிடைப்பதில்லை என பலரும் கூறி வருகிறார்கள்.
இனி ஓடிபி கொடுத்தால் தான்
இதிலும் சமீப காலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பலருக்கும் டிக்கெட் கிடைப்பது இல்லை என்றும், புக் செய்யும் போது டிக்கெட் இருப்பது போல காட்டினாலும் கூட பேமெண்ட் லெவலுக்கு வருவதற்குள் டிக்கெட் காலியாகிவிடும் சூழலே இருப்பதாக பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதனையடுத்து தான் தற்போது ஓடிபி கொடுத்தால் தான் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும் என்ற வசதியை ரயில்வே கொண்டு வந்துள்ளது.
தட்கல் டிக்கெட் புக்கிங்க்கு புதிய பாதுகாப்பு வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஓடிபி வெரிஃபிகேஷன் செய்த பிறகு இனி தட்கல் டிக்கெட் புக்கிங் ஆகும். டிக்கெட் புக்கிங் செய்யும் பயணியின் செல்போன் எண்ணுக்கு வரும் ஒன் டைம் பாஸ்வேர்ட் உள்ளீடு செய்த பிறகு டிக்கெட் புக் ஆகும். யார் டிக்கெட் புக் செய்கிறார்களோ அவர்களது செல்போன் எண்ணுக்கு இந்த ஓடிபி அனுப்பப்படும். அதை வைத்து டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில்
ஆன்லைன் டிக்கெட் மட்டுமின்றி கவுண்டரில் புக் செய்யப்படும் தட்கல் டிக்கெட்டுக்கும் இது பொருந்தும் என ரயில்வே தெரிவித்துள்ளது. தட்கல் டிக்கெட்டுக்கு ஓடிபி கோரும் வசதி, முதல் கட்டமாக மும்பை சென்ட்ரல் - அகமதாபாத் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 12009/12010 நடைமுறைப்படுத்தப்படும். தொடர்ந்து படிப்படியாக, இந்த வசதியானது மற்ற வழித்தட ரயில்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
தட்கல் டிக்கெட்டில் செய்யப்படும் இந்த மாற்றங்கள் மூலம், பயணம் செய்ய வேண்டிய உண்மையான நபர்களுக்குத் தேவையான நேரத்தில் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். விரைவில் தெற்கு ரயில்வேயிலும் இந்த வசதி அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது.
பயணிகள் கருத்து
ஏற்கனவே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது குறிப்பிட்ட நொடிகளில் டிக்கெட் காலியாகிவிடும் என்ற நிலையில் இனி ஓடிபி கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்தால் இன்னும் கூடுதல் தாமதம் ஆகும் என்றும், இதனால் டிக்கெட் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுவதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். டிக்கெட் முன்பதிவின் போது ஐஆர்சிடிசி சர்வர் பிரச்சினை ஏற்படுவது டிக்கெட் முன்பதிவுக்கு இடையூறாக உள்ளது. எனவே அவற்றை சரி செய்யலாம் என்பது பயணிகள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications