சென்னை முதல் குமரி வரை ஆலயங்கள் திறப்பு - கொரோனா விதிமுறைகளுடன் பக்தர்கள் வழிபாடு
தமிழகம் முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. மாநிலம் முழுவதும் அதிகாலை முதல் ஆலயங்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன. 2 மாதங்களுக்குப் பிறகு ஆலயங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்து கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று மனமுருகி வேண்டிக்கொண்டனர்.
Recommended Video
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளுக்கு சென்று வழிபாடு செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் கோவில்களை திறந்து அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று ஆகம விதிப்படி, வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த வாரம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆலயங்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திறக்கப்பட்டன.
இன்று முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே அனைத்து வழிபாட்டு தலங்களும் அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே கோவில்களுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

கண் குளிர தரிசனம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஏப்ரல் 24ஆம் தேதி திருக்கல்யாண தினத்தன்று பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது தமிழக அரசு முழு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலையில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. காலை 6 மணி முதல் தரிசனம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாலையில் இருந்தே ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கோவிலின் உள்ளே செல்வதற்காக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

10 வயதுக்குள் 65 வயதுக்கு மேல் அனுமதி இல்லை
பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலில் எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது .
பக்தர்கள் திருக்கோயிலுக்குள் தேங்காய், பழம் , கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை. திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் வழக்கம்போல் நிர்வாகத்தின் மூலம் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் . 10 வயதிற்கு குறைவானவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் கர்ப்பிணி பெண்கள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது .

பெரிய கோவில்
தஞ்சாவூர் பெரியகோயில் 80 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடைபெற்றது. இக்கோயிலிலுள்ள பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி மற்றும் வாராஹி அம்மன் சன்னதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், கருவூரார், முருகன் சன்னதிகள் ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் 2 அடி இடைவெளி விட்டு வட்டம் வரையப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

முக கவசம் அவசியம்
கோயிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவருக்கும் நுழைவு வாயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வெப்பமானி மூலம் பரிசோதனையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. எனவும் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர். இதேபோல, மாவட்டத்திலுள்ள மற்ற கோயில்களும், இன்று முதல் திறக்கப்படவுள்ளதையொட்டி, கொரோனா தடுப்புத் தொடர்பாகத் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் , ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வழிவிடு முருகன் கோவில் முன்பாக பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர் அதேபோல் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் முன்பாக இன்று அதிகாலை ராமேஸ்வரத்திற்கு நேற்று முதலே ராமநாத சுவாமி தரிசனம் செய்ய வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் தரிசனம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவில் காலையிலேயே திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு பொது தரிசன வரிசையில் தனிமனித இடைவேளி விட்டு சாமி கும்பிடுவதற்கு வட்டங்கள் வரையப்பட்டுள்ள வரிசையில் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 71 நாட்களுக்கு பிறகு பண்ணாரி அம்மன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

பக்தர்கள் தரிசனம்
கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பேரிகார்டு அமைக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு வரிசையாக நின்று சாமி தரிசனம் பெற்றுச் சென்ற பக்தர்கள் மேலும் அதே போன்று அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றனர் முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications