வச்சிருங்க.. எடுத்த இடத்தில் போட்டுருங்க.. இல்லேன்னா போலீஸ் வரும்.. தண்டோராவால் அதிர்ந்த கனியாமூர்
கலவரத்தில் எடுத்த பொருட்களை ஒப்படைக்குமாறு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது
கள்ளக்குறிச்சி: கலவரம் நடந்தபோது, பள்ளியில் இருந்த பொருட்களை யாரேனும் எடுத்திருந்தால் ஊராட்சி பள்ளியில் வைத்து விடவும், இல்லையெனில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தண்டோரா மூலம் இன்றும் அறிவிக்க உள்ளது.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே கனியாமூரில் பிளஸ் 2 மாணவி, கடந்த 12ம் தேதி இரவு மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்:வாட்ஸ் ஆஃப் குழு மூலம் போராட்டத்திற்கு ஆள் சேர்ப்பு-ஆலங்குடியில் 6 போ் கைது
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, பெற்றோர், உறவினர்கள் குற்றச்சாட்டி கதறி அழுது வருகிறார்கள்..
குழப்பம்
மாணவி எப்படி இறந்தார் என்றே தெரியாமல் தமிழக மக்கள் கலங்கி உள்ளனர்.. இது தொடர்பான விசாரணைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இந்த மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி பள்ளி முன்பு மிகப்பெரிய போராட்டம் நடந்தது.. ஆனால், அந்த போராட்டம், மிகப்பெரிய கலவரமாக வெடித்தது.. இதில் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்..
ஏசி மெஷின்கள்
இந்த கலவரத்தை பயன்படுத்தி கொண்டு, பள்ளிக்கு அருகில் இருந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளிக்குள் இருந்த மேஜை, நாற்காலிகள், வகுப்பறைகளில் இருந்த டேபிள், பென்ச், சமையல் பாத்திரங்கள், ஏசி மிஷின்கள், கம்ப்யூட்டர்கள், சேர், ஃபேன் , என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி சென்றுவிட்டனர்.. இவர்கள் எல்லாம் யார் என்று தெரியவில்லை.. அதனால், பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை எல்லாம், பள்ளி வளாகம் அருகே எடுத்து வந்து போட்டு விட்டு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
வார்னிங்
அதன்படி, சின்னசேலம் வருவாய் துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின்படி, தச்சூரில் தண்டோரா மூலம் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது... "கலவரம் நடக்கும்போது, பொருட்களை தூக்கிட்டு வந்தவங்க, ஸ்கூல் முன்னாடி கொண்டு வந்து போட்டுடுங்க.. எடுத்த எடத்துல வச்சிடுங்க, இல்லன்னா போலீஸ் வரும்" என்று தண்டோரா போடப்பட்டது. தண்டோரா போடப்பட்டதற்கு, அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது.. இதையடுத்து, தச்சூரை தொடர்ந்து அருகில் உள்ள ஊராட்சிகளிலும், மற்றும் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளிலும் இதேபோல இன்றும் தண்டோரா போட முடிவுசெய்துள்ளனர்...
சபாஷ் ஏற்பாடு
ஆதச்சூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பழனிவேல் யோசனையின் பேரில், ஊராட்சி தலைவர் மல்லிகா அண்ணாதுரை உத்தரவுபடி, ஊராட்சி செயலாளர் சிவசூரியன் என்பவர்தான், இந்த தண்டோரா போடுவதற்கான ஏற்பாடு செய்தாராம். அவருக்கும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால், எடுத்த பொருளை எடுத்த எடத்துல வச்சிடுங்க.. இல்லேன்னா போலீஸ் வரும் என்ற அறிவிப்பை கேட்டதுமே, சம்பந்தப்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனராம்..!