6-ம் தேதி முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது!
சென்னை: 9 மாவட்டங்களில் 6-ம் தேதி முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்துளளது. முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 41.93 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது.

அரசியல் கட்சிகள்
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்புடன் தேர்தல் பணியில் ஈடுபட தொடங்கின. தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்து விட்ட அ.தி.மு.க 9 மாவட்டங்களில் வெற்றி வாகை சூட முதன் முதலாக வேகமாக களமிறங்கியது.

தீவிர பிரசாரம்
தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் அ.தி.மு.க கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்தது. இதன்பினர் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஆளும் கட்சியான திமுகவை பொறுத்தவரை மக்களுக்கு செய்த திட்டங்கள், சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரித்தது. அரசின் திட்டங்கள் மக்களின் கையில் நேரடியாக சென்றடைய ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது தவிர இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் சீமான், மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் ஆகியோர் பிரசாரம் மேற்கொணடனர்.

பிரசாரம் ஓய்ந்துள்ளது
இந்த நிலையில் வருகிற 6-ம் தேதி முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்துளளது. 9 மாவட்டங்களில் 78 ஊராட்சி வார்டு தலைவர் பதவிக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 755 ஊராட்சி ஒன்றிய வார்டு இடங்களுக்கும், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும் வருகிற 6-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை
முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 41.93 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 9-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 12-ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கடைசி 1 மணி நேரம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications