கருக்கலைப்பு புகார்.. சிக்கலில் மாஜி அமைச்சர் மணிகண்டன்.. நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: திருமண ஆசைகாட்டி நடிகையை ஏமாற்றிய புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
3 முறை தனக்கு, கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் சாந்தினி புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மாஜி அமைச்சர் கைது
இந்த வழக்கில் மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 16ஆம் தேதி தள்ளுபடி செய்ததையடுத்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் ஜூன் 20 ஆம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

கர்ப்பத்திற்கு ஆதாரம் இல்லை
இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிகண்டன் தரப்பில் நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கும், தன்னுடன் பழகிய சில நாட்களிலேயே கர்ப்பமானார் என்று கூறுவதற்கும் ஆதாரங்கள் இல்லை என்றும், ஆரம்பகட்ட விசாரணையை முழுமையாக முடிக்காமலும், தன்னிடம் விளக்கம் பெறாமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது.

அரசு தரப்பு ஆட்சேபனை
காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் இ.ஜெய்சங்கர், காவல்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், தன்னை விட்டுப் போகக் கூடாது என நடிகைக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்தது, தன்னுடைய வாட்ஸ் ஆப் எண்ணிலிருந்து நடிகைக்கு போட்டோக்கள் அனுப்பியது,
இருவரும் ஒன்றாக தங்கியிருந்தது ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.

சாந்தினி தரப்பில் எதிர்ப்பு
அதேபோல புகார்தாரரான நடிகை சாந்தினி தரப்பில், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

மணிகண்டன் உதவியாளர்
அதேநேரம், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மணிகண்டன் உதவியாளர் பரணிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தாம் எந்த குற்றம் செய்யவில்லை எனவும் எதனக்கு எதிரான குற்றச்சாட்டு ஆதாரம் இல்லை எனவே முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரியிந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், எந்த விதமான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகந்திரம் இல்லை எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

அறிமுகம் செய்து வைத்தது பரணிதரன்
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் அளித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை மனுதரார் வெளியிட்டுள்ளார் எனவே முன் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தார். அப்போது நீதிபதி, மனுதரார் புகார் அளித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார் என்பதற்கு எந்த ஆதாரம் இல்லை பதில் மனுவில் இல்லை முதல் தகவல் அறிக்கையில் இல்லை முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மந்தப்பட்ட புகார் அளித்த பெண்ணை அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. மற்ற எந்த குற்றச்சாட்டு இவர் மீது இல்லை அதற்கான ஆதாரம் இல்லை என தெரிவித்தார்.

நிபந்தனை முன் ஜாமீன்
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி தண்டபாணி, மனுதரார் பரணிதரன் எதிரான குற்றச்சாட்டு அடிப்படை முகந்திரத்திற்கு ஆதாரம் இல்லை முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் புகார் அளித்த மலேசிய பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார். மற்ற குற்றச்சாட்டு இல்லை எனவே இந்த வழக்கில் நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications