என்ன பண்ணிட்டு இருந்தீங்க..சீமை கருவேல மரங்கள் மண்ணை மலடாக்கும்.. அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம்
சென்னை : தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்த திட்டத்தை இரண்டு வாரங்களில் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமை கருவேல மரம் ஒரு நச்சு மரம். நிலத்தடி நீரை வீணாக உறிஞ்சுவதோடு மட்டுமல்லாமல், பல பாதகங்கள் இந்த மரங்களினால் உண்டு. இந்த மரங்களால் மண்ணில் மக்கும் தன்மை பாதிக்கப்படுகிறது.
இந்த மரங்கள் அதிக வெப்பமாக இருப்பதால் இதில் பறவைகளாலும், பூச்சிகளாலும், தேனீக்களாலும் கூடு கட்டவோ, வாழவோ முடியாது. இதனால் பல்லுயிர் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

சீமை கருவேல மரங்கள் குறித்த வழக்கு
தமிழகம் முழுவதும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி ஆதுகேசவலு அடங்கிய முழு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

6 மாதம் அவகாசம்
அப்போது, அரசு தரப்பில், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு திட்டமும் வகுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அறிவியல் ரீதியாக அகற்றுவதற்காக, நிபுணர் குழு மற்றும் நீரி அமைப்பின் அறிக்கை கோரியுள்ளதாகவும், அவை கிடைத்த பின் முழுமையாக அகற்றுவது தொடர்பாக திட்டம் வகுக்க 6 மாத அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

நிலத்தை மலடாக்கும்
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை பாதிப்பது மட்டுமல்ல, நிலத்தையும் மலடாக்கி விடுகிறது என்பதால் அவற்றை வெறுமனே வெட்டுவது மட்டுமல்லாமல், வேரோடு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். 2015ஆம் ஆண்டு தொடரபட்ட வழக்கில், 2017ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், 5 ஆண்டுகளாக முழுமையாக அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதிகள், குழுக்கள் மேல் குழுக்கள் அமைத்து அறிக்கை கேட்பதால் எந்த பலனும் இல்லை என தெரிவித்தனர்.

தமிழக அரசு
சமநிலையற்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக இரண்டு வாரங்களில் திட்டம் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் அமல்படுத்த வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியையோ அல்லது அரசு நிதி ஒதுக்கியோ பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications