போலீஸ் ஸ்டேஷன்களில் வரவேற்பாளர்கள்! சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்! 912 பேருக்கு பணி ஆணை!
சென்னை: காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருபவர்களை இன்முகத்தோடு வரவேற்க வரவேற்பாளர்களை பணி நியமனம் செய்து அதற்கான பணி ஆணைகளை வழங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்பவர்கள் பலரும் அங்கு அலுவல் நடைமுறை என்னவென்று தெரியாமல் தவிக்கும் நிலையில் அவர்களுக்கு வரவேற்பாளர்கள் மிகுந்த உதவியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான முழு விவரம் வருமாறு;
எடப்பாடி வீசிய 6 சரவெடிகள்.. ஒரே பாயிண்டில் பதிலடி தந்த ஓபிஎஸ்.. கோர்டில் நடந்தது என்ன? பின்னணி!
வரவேற்பாளர் பணி
காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 நபர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சொன்னதை செய்தார்
2021-22ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படும் என்று 13.9.2021 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
912 வாரிசுதாரர்கள்
அந்த அறிவிப்பின்படி, காவல்நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 457 ஆண்கள் மற்றும் 455 பெண்கள் என மொத்தம் 912 வாரிசுதாரர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடத்திற்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 நபர்களுக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தயக்கமின்றி செல்லலாம்
இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் இரயில்வே காவல் நிலையங்களில் பணியமர்த்தப்படுவர். இதன் மூலம் காவல் நிலையங்களுக்கு முதல் முறையாக புகார் அளிக்க செல்பவர்கள் தயக்கமின்றி செல்லக்கூடிய சூழல் உருவாகக்கூடும்.