ஆளுநரின் நிகழ்ச்சியில் பங்கேற்றால்தான் வருகைப்பதிவு..அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை! மாணவர்கள் ஷாக்
சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆளுநர் பங்கேற்றுள்ள நிலையில், மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு செய்யப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருக்கிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மட்டுமே வருகைப்பதிவு செய்யப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

அதாவது இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் செமஸ்டர் தேர்வு வர உள்ள நிலையில், மாணவர்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்டாயப்படுத்துவது சரியல்ல என கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “மாணவர்கள் வருகை குறித்து நாங்கள் பதிவு செய்யவில்லை. அப்படி சொன்னால் மட்டுமே நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்று சொல்லியிருந்தோம். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அரங்கத்தை நிரப்ப வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. லேப் வகுப்புகளை தவிர்த்துவிட்டு நிகழ்ச்சி வர கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியும் ஒரு வகுப்புதான். என லேப் வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்படாது” என்று விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications