டெல்லி முதல் குமரி வரை.. சரமாரியாக வெடிக்கும் பாஜக.. பட்டாசு கட்டுப்பாட்டை எதிர்த்து!
பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்க கூடாது என பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: தமிழ்நாடு முதல் வட மாநிலம் வரை பாஜகவினர் ஒரே குரலில் ஒரு விஷயத்துக்காக அணி திரண்டுள்ளனர். அது பட்டாசுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை எதிர்த்து. இந்த ஒரு விஷயத்தில்தான் பாஜகவினர் மக்களின் கருத்தோடு ஒத்துப் போகிறார்கள் என்பது போனஸ் செய்தி.
பொதுவாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பெரும்பாலும் மத்திய அரசுக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள பட்டாசு வெடிப்பது சம்பந்தமான தீர்ப்பானது, மத்திய அரசு உள்பட நாடு முழுவதுமே அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.
ஒலியும் - ஒளியும்
ஒலியும் -ஒளியும் கலந்ததுதானே தீபாவளி, வெடி இல்லாத தீபாவளி நம் நாட்டில் ஏது என்று தனிநபர்கள் ஒவ்வொவரும் இந்த கேள்வியை எழுப்பி அதிருப்தி அடைந்து வருகின்றனர். ஆனாலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடித்து கொள்ளுங்கள் என்று கோர்ட் கூறியுள்ளது. இந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாசம் ஜெயில் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
ஜெயிக்குகூட போவேன்
இந்த தீர்ப்புக்கு மற்ற கட்சிகளைவிட பாஜக சார்பில் அதிகமாகவே கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது. மத்தியபிரதேசம் மாநிலம், உஜ்ஜைனி தொகுதியின் பா.ஜ எம்.பி., சிந்தாமணி மாளவியா தன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை போட்டு பரபரப்பாக்கி விட்டார். அதில், "நான் ராத்திரி 10 மணிக்கு மேலதான் லட்சுமி பூஜை செய்வேன்.. அதற்கு பிறகுதான் பட்டாசு வெடிப்பேன். இந்த முறையும் அப்படித்தான் பட்டாசு வெடித்தே தீருவேன். இந்து பாரம்பரியங்களில் பிறர் தலையீட்டை என்னால் சகித்து கொள்ள முடியாது. என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிக்க ஜெயிலுக்கு போகக்கூட தயார்" என்றார்.
புத்தாடை அணிய கூடாதோ?
இவர் இப்படி சொல்கிறார் நம்முடைய எச்.ராஜா, "பட்டாசு வெடிக்க கூடாது என்றால் எப்படி? இப்படியே போனால் தீபாவளிக்கு புத்தாடை அணியக்கூடாது என்று கூட தீர்ப்பு வந்துவிடுமோ' என்று பயமாக இருக்கிறது என்றார். அதேபோல பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜனும், வெடியும், வெளிச்சமும் சேர்ந்தது தான் தீபாவளி பண்டிகையே. விடியற்காலை வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் தீபாவளியின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய தீபாவளியை பயந்து பயந்தா கொண்டாடுவது, என்று கேட்டுள்ளார்.
வீட்டுக்கு வீடு போலீஸா?
ஆனால் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியாயமான சில கேள்விகளை கேட்டுள்ளார். அது என்னவென்றால், "தீபாவளிக்கு எப்பவுமே பட்டாசு வெடிப்பது பெரியவர்கள் அல்ல, 90 சதவீதத்திற்கும் மேல குழந்தைகள்தான். அப்படி இருக்கும்போது, அவர்கள் மீது சட்டத்தை புகுத்துவீர்களா? அப்படி குழந்தைகளிடம் என்ன சட்டத்தை புகுத்த போகிறீர்களா? என்ன நடக்கப்போகிறது? எது சாத்தியப்படும்? வீட்டுக்கு வீடு போலீஸாரைப் போட போகிறீர்களா? அல்லது ஒரு தெருவுக்கு ஒரு போலீஸ் குழுவை போட போகிறார்களா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
பண்டிகையா? தண்டனையா?
இந்து மத பின்னணியில் அனைத்து பாஜக தலைவர்களும் இப்படி ஒருமித்த கருத்தை வலியுறுத்துவதாகவே எடுத்து கொண்டாலும், உண்மையிலேயே சட்டவிரோதமாக குழந்தைகள் பட்டாசு வெடித்தால் நீதிமன்றம் என்ன செய்ய போகிறதோ? எத்தனை பேரை கைது செய்ய போகிறதோ? எத்தனை பேர் மீது வழக்கு போட போகிறதோ? என்பது தெரியவில்லைதான். சுப்ரீம் கோர்ட் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது பண்டிகையா? தண்டனையா? என தெரியவில்லையே!
சட்டமா? பழக்கவழக்கமா?
சில விஷயங்களிள், குறிப்பாக பாரம்பரிய விவகாரங்களில் மக்கள் மனதை அறிந்து தீர்ப்புகள் வருவது சரியாக இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். மக்களுக்கு சட்டம் தெரியாது. பழக்கம் வழக்கம்தான் தெரியும். அதேசமயம், சட்டம் தெரி்ந்தவர்கள், மக்கள் மனதையும் புரிந்து தீர்ப்புகள் எழுதினால் மக்கள் தங்களது வழக்கமான கொண்டாட்டத்தை கடைப்பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். உரியவர்கள் யோசிப்பார்களா?