புரோகிதர்களை விட.. சீர்திருத்த திருமணம் நடத்தி வைக்கும் எனக்கு டிமாண்ட் அதிகம்! ஸ்டாலின் கலகல பேச்சு
சென்னை: நாட்டில் வைதீக முறைப்படி திருமணம் செய்துவைக்கும் புரோகிதர்களை காட்டிலும் இந்த புரோகிதருக்கு தான் கிராக்கி அதிகம் இருப்பதாக தன்னைப்பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக பொதுக்குழு உறுப்பினர் நாராயணனின் மகன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
திருமணத்தை நடத்த வைத்து, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய், அவர்களோடு திட்டமிடு, அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து தொடங்கு, அவர்களிடம் இருப்பதை கொண்டு கடமையை செய் என திமுக தொண்டர்களுக்கு பேரறிஞர் அண்ணா தாரக மந்திரத்தை கற்று கொடுத்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று இருக்கிறது. 99% வெற்றியை நாம் பெற்றுள்ளோம். வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்கள் பணியாற்ற வேண்டும். நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு இதுவே சாட்சி. எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும்கட்சியாக இருந்தாலும் சரி, நாம் மக்களுக்காக உழைத்து இருக்கிறோம்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆளுங்கட்சியாக செயல்பட்டோம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை எதிர்க்கட்சியாக இருந்தபோதே தூர்வாரினோம். திமுகதான் ஆட்சியில் உள்ளது என்று மக்கள் சிந்திக்கும் அளவுக்கு நமது பணிகள் அமைந்தன. புயல் வெள்ள பாதிப்புகளின்போது முதலில் ஓடிச்சென்று உதவியது திமுக. மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியதால்தான் பொய் பிரச்சாரங்களை முறியடித்து திமுக மாபெரும் வெற்றிபெற்று இருக்கிறது.

என்னை டாக்டரா என எடப்பாடி கேட்டார்
நமக்கென்று ஆபத்து வந்தால் உடனடியாக ஓடி வந்து உதவக்கூடிய இயக்கம்தான் திமுக என்று மக்கள் உணர்கின்றனர். கொரோனா பரவலை தடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசிடம் சொன்னோம். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்னை பார்த்து டாக்டரா எனக்கேட்டார்.

கொரோனாவை கட்டுப்படுத்தியது திமுக அரசு
நாம் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா பிடி அதிகம் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா மட்டுமின்றி உலகிலேயே கொரோனாவை கட்டுப்படுத்திய முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் கொரோனா காலத்தில் மக்களுக்கு திமுக உதவியது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை திமுக தொண்டர்கள் வீடு தேடி வழங்கினர்.

கிராக்கியான புரோகிதர் நான்தான்
நான் இந்த திருமணத்துக்கு வரும்போதுகூட, என் வீட்டு வாசலில் ஒரு திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறேன். வைதீக திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர்களுக்கு கிராக்கி உள்ளதோ இல்லையோ, அவர்களை விட சீர்திருத்த திருமணம் நடத்தி வைக்கும் இந்த புரோகிதருக்கு கிராக்கி அதிகம் உள்ளது.

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்
எனக்கு முன் பேசிய அமைச்சர் பொன்முடி கூட தமிழ் பெயர் வையுங்கள் என்று சொன்னார். நானும் அடிக்கடி பல கூட்டங்களிலும், விழாக்களிலும், திருமண நிகழ்வுகளிலும் பல முறை தமிழில் பெயர் வைக்க எடுத்துச் சொல்லி வருகிறேன். மணமக்களை வாழ்த்தும் இந்த நேரத்தில் அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள், தமிழ்நாட்டுக்கு பெருமை சேருங்கள். தமிழர் என்ற உணர்வை கொடுங்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications