பொங்கல் விடுமுறை எதிரொலி... வெறிச்சோடி காணப்படும் சென்னை சாலைகள்
சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக சென்னையின் பிரதான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
அண்ணா சாலை, காமராஜர் சாலை, தியாகராயர் நகர் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும் நிலையில் இன்று அந்த பகுதிகள் முழுவதும் காலியாக உள்ளன.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் எந்தவித பரபரப்புமின்றி அமைதியாக காட்சியளிக்கிறது சென்னை.

வெறிச்சோடி
சென்னையில் வசிக்கக் கூடியவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்றுவிட்டனர். இதனால் நகரின் பல சாலைகள் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மக்கள் நடமாட்டம்
தியாகராயர் நகர், அண்ணா சாலை போன்ற இடங்கள் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருக்கும் நிலையில் இன்று காலை முதல் வெறிச்சோடியே காணப்படுகிறது. பேருந்து நிறுத்தங்களில் கூட 3 அல்லது 4 பேர் மட்டுமே நிற்கின்றனர்.

காலிப்பெட்டி
வேளச்சேரி- சென்னை கடற்கரை, தாம்பரம் -சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களில் கூட்டம் மிக மிக குறைவாகவே இருந்தது. ஒரு பெட்டிக்கு 5 முதல் 7 பேர் மட்டுமே மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர். இதேபோல் மெட்ரோவிலும் கூட்டம் இல்லை.

வெளியேறினர்
கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 12 லட்சம் பேர் வெளியேறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை முடிந்து வரும் திங்கள்கிழமை அன்று தான் அவர்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications