டிஜிபி சைலந்திரபாவுவின் உத்தரவால் போலீஸ் குடும்பங்கள் ஹேப்பி.. முதல் ஆளாக வரவேற்ற விஜயகாந்த்
சென்னை : காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை கொடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவின் அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். இதேபோல் காவல்துறையில் உள்ளவர்களும், முன்னாள் காவல்துறை அதிகாரிகளும், காவலர்கள் குடும்பத்தினரும் வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுஊழியர்கள் அனைவருக்கும் வார விடுமுறை உண்டு.அதுவும் பெரும்பாலான துறைகளில் உள்ளவர்களுக்கு ஞாயிறு விடுமுறை கட்டாயம். மின்வாரியம் , குடிநீர் வாரியம், போக்குவரத்து துறை, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் உள்ளவர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஆனால் வாரவிடுமுறையே இல்லாமல் பணியாற்றும் ஒரே அரசு துறை.. அது காவல்துறை தான். மிக அதிகப்படியான பணிசூழல் உள்ள துறையும் காவல்துறை தான். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் இந்துறையில் பலர் வாரவிடுமுறை இல்லாமல் மன அழுத்ததுடன் பணியாற்றி வருகிறார்கள். குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் தவித்து வந்தார்கள்.

என்ன சொன்னார்
இந்நிலையில் காவல் துறையினருக்கு வார விடுமறை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவிட்டார். இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர்களுக்கும் அவர் சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளார்.

கட்டாயம் ஓய்வு
அவர் தனது அறிக்கையில் "காவலர்கள் தங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ள ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தில்பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

திருமண நாள்
போலீஸாரின் பிறந்தநாள், திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக, அந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். காவல் துறை சார்பில் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்துச்செய்தி, மாவட்ட, மாநகர காவல்கட்டுப்பாட்டு அறையின் வானொலிமூலமாக சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இதை தவறாமல் செயல்படுத்த வேண்டும்" இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல்வருக்கு நன்றி
இந்த உத்தரவு காவல் துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் காண்பது கனவா, நினைவா என்று நினைத்து தித்திக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் டிஜிபி. தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய டிஜிபி சைலந்திரபாவுக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video

பாராட்டுக்கள்
இதனிடையே காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது பாராட்டுக்கள் என - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். காவல்துறையில் உள்ளவர்களும் ஓய்வு பெற்றவர்கள் பலரும் அரசின் அறிவிப்பை வரவேற்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளார்கள். வாரவிடுறை, தங்கள் நெருக்கமானவர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற சமயங்களில் விடுறை தரப்படுவதால், இனி போலீசாரின் மனஅழுத்தம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications