அலுவல் ரீதியாக அனுப்பிய கடிதம் விவாதப்பொருளாக மாறியுள்ளது - இறையன்பு விளக்கம்
புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் விதமாகவே தரவுகள் திரட்டப்படுகின்றன என்று தலைமை செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: அலுவல் ரீதியாக துறை செயலர்களுக்கு நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப்பொருளாக மாறியிருக்கிறது என தலைமை செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் விதமாகவே தரவுகள் திரட்டப்படுகின்றன எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்புவிடம் ஆளுநர் ரவி அறிக்கை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதுவும் டெல்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்த நிலையில் இந்த அறிக்கை கேட்டிருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயிண்ட்டில் தயார் செய்து வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும். ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும் என்று அந்த கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழப்பம் வரும்
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஒவ்வொரு துறை அதிகாரிகளின் தகவலையும் கேட்டிருப்பது என்பது ஏற்க முடியாது என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ், ஆளுநரின் அதிகாரத்தை தமிழக முதல்வர் மதிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் மத்திய அரசு ஆளுநர் மூலம் வரம்பு மீறி செயல்பட்டால் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது. நெருப்பு இருந்தால் மட்டுமே வந்து அணைக்க வேண்டும். ஆளுநர் வரம்பை மீறினால் முதல்வர் பயப்படமாட்டார். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது மக்களிடையே இரட்டை ஆட்சி நடக்கின்றது என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

உரிமையில்லை
தமிழக அரசின் திட்டங்கள், துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிக் கண்காணிப்பதற்கோ, தலையிடுவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியிருந்தார். மாநில அரசு நிறைவேற்றும் திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை தருமாறு, தமிழக ஆளுநர் கேட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இறையன்பு விளக்கம்
துறை செயலர்களுக்கு தலைமை செயலாளர் அனுப்பிய கடிதம் விவாதப் பொருளான நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார். அலுவல் ரீதியாக துறை செயலர்களுக்கு நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறியிருக்கிறது என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் விதமாகவே தரவுகள் திரட்டப்படுகின்றன.

சர்ச்சை வேண்டாம்
நிர்வாகத்தில் வழக்கமான ஒன்றுதான் இந்த நடைமுறை. நிர்வாக ரீதியான கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானதல்ல. அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைதான் என்பது தெரியும் என விளக்கம் அளித்துள்ளார்.













Click it and Unblock the Notifications