வங்கக் கடலில் உருவானது தாழ்வு மண்டலம்! தமிழகத்தை நோக்கி வரும் ‘சக்கரம்’! மழை தருமா ‘மாண்டஸ்’?
சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், அது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை சூறாவளி புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டிருந்தது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று 7 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை புயலாக வலுவடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தாழ்வு மண்டலம்
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மாலை 7.30 மணியளவில் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது வங்க கடலில் இலங்கையின் திரிகோண மலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு பகுதியில் 770 கிலோ மீட்டர் தொலைவில் காரைக்கால் சென்னையில் இருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 970 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

சூறாவளி புயல்
இந்த தாழ்வு மண்டலம் ஆனது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை சூறாவளி புயலாக மாறும் எனவும் அதனைத் தொடர்ந்து மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும். இதன் காரணமாக நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இடி மின்னலுடன் மழை
நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்பு குழுவினர்
இதன் காரணமாக புதுவை தமிழகம் மற்றும் ஆந்திர கடலொர பகுதிகளில் புயலுக்கு முந்தைய கண்காணிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இது தவிர மாண்டஸ் புயல் எதிரொலியாக தமிழகத்தின் வருகிற 9ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனையடுத்து மழை பாதிப்பு ஏற்படக்கூடிய ஆறு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் மீட்பு படகுகள், மரம் அறுக்கும் இயந்திரம் போன்ற மீட்பு உபகரணங்களுடன் குடிகாடு புயல் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications