மாதவரம்.. தீ விபத்து பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.. ஆம்புலன்சுகளும் விரைந்தன
சென்னை: மாதவரம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட இடம் முழுக்க காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு 5 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு ரசாயன கிடங்கில் இன்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் மளமளவென அருகே உள்ள பகுதிகளுக்கு பரவியது. அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட பழைய லாரிகளிலும் தீ பரவியதால் அதிலிருந்த டீசலும் சேர்ந்து கொண்டு தீ விபத்து வீரியத்தை மேலும் அதிகரித்தன.

தகவலறிந்து, முதலில் 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வருகை தந்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து 10 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வருகைதந்து போராடினர். அப்படியும் தீயை அணைக்க முடியவில்லை.
இதற்கு காரணம் ரசாயனத்தின் காரணமாக ஏற்பட்ட தீ என்பதால் சாதாரண தண்ணீரை கொண்டு அவற்றை அணைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மொத்தம் 15 வாகனங்களில் வீரர்கள் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
ஆயினும், கடுமையான கரும் புகை மூட்டம் எழுந்து அந்த பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த பகுதி முழுக்கவே காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இந்த தீ விபத்தால் வெளியாகக் கூடிய புகை மற்றும் வெப்பத்தால் தீயணைப்பு வீரர்களும் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர வேறு பொதுமக்களும் எதிர்பாராமல் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் அங்கு அவசர சிகிச்சைக்காக 5 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருவதால், இன்னும் பல மணி நேரம் போராட்டம் தொடரும் என்று தான் தெரிகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். தீயணைப்பதிலும், மக்களை வெளியேற்றுவதிலும், காவல்துறையினருக்கு அவர்கள் வழிகாட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications