வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து! நீதிபதியிடம் கடைசி நேரத்தில் மன்றாடிய பாமக பாலு..! நடந்தது என்ன?
சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடை ரத்து செய்த தீர்ப்பை நிறுத்தி வைக்க மதுரை ஹைகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
பாமக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது ஹைகோர்ட் மதுரை கிளை.
Recommended Video
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த வழக்கில் இன்று இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு முடிவு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.

வழக்கறிஞர் பாலு
சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு தினந்தோறும் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு முன்னிலையில், விசாரணை நடைபெற்றது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று 50க்கும் மேற்பட்டோர் மனுதாரர்கள் தினந்தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். வன்னியர்கள் இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று வாதிட்டோர் தரப்பில் பாமக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு ஆஜரானார்.

இட ஒதுக்கீடு ரத்து
இந்த நிலையில்தான், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா, மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா, உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிக்கை
இருப்பினும் வழக்கறிஞர் பாலு இந்த தீர்ப்பை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கும்படியும் நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுக போவதாகவும் நீதிபதிகள் முன்பாக கோரிக்கை விடுத்தார். இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவ, மாணவிகள் ஒதுக்கீடுகளை பெற்று விட்டதாகவும் எனவே இப்போது இந்த தீர்ப்பு கடைப்பிடிக்கப்பட்டால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் பாலு வாதம் முன்வைத்தார். ஆனால் இந்த வாதத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இடைக்கால உத்தரவில் கூறிவிட்டோம்
இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவின் போது 10.5% இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெளிவாக கூறி இருக்கிறோம். எனவே, இந்த தீர்ப்பை இப்போது நிறுத்தி வைப்பது மேலும் குழப்பங்களுக்கு காரணமாக மாறிவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications