மக்களே எஜமானர்கள்...ஒரு ரூபாய் செலவு செய்தாலும் பலன் சென்று சேர வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அதன் நன்மை மக்களுக்கு எந்த குறையுமில்லாமல் கிடைக்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள்தான் எஜமானர்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மறந்து விடாதீர்கள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அதன் நன்மை மக்களுக்கு எந்த குறையுமில்லாமல் கிடைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அத்துடன் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி அன்று அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்.நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் கடந்த 10 மாதங்களாக பல்வேறு நலத்திட்டங்களை மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறார். மாநிலம் முழுவதும் அரசின் திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்துவது குறித்தும், மாநிலத்தில்சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காகவும், ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாடு நடத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக இந்த மாநாடு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி இந்த மாநாடு நேற்று தொடங்கியது. 12ஆம் தேதி வரை, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநாடு நடைபெறுகிறது.
ஆக்சிஜனை உறிஞ்சி.. கொத்தாக கொல்லும்
களநிலவரம்
மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்கள் குறித்து, கள நிலவரத்தை விரிவாக நீங்கள் இங்கே எடுத்துரைக்கலாம். இந்த அரசினுடைய திட்டங்களின் பயன் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களில் அதை இணைத்து தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள்தான் எஜமானர்கள்
எங்களுக்கும், உங்களுக்கும் அதாவது, எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆகவே, ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திட முடியும்.
இயற்கை வளங்கள்
ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இருந்தால், நீங்கள் இங்கே கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பொருட்கள் கிடைக்கிறது. அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை வளங்கள் அதிகமாக இருக்கலாம். அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அதிலிருந்து எப்படி அரசிற்கு வருமானத்தைப் பெருக்குவது என்பது குறித்தும், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த கருத்துக்களையெல்லாம் நீங்கள் இங்கே தெரிவிக்கலாம்.
நேர்மையான நிர்வாகம்
நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, உங்களுடைய ஆலோசனைகளை சுதந்திரமாக நீங்கள் கூறலாம். அந்த வகையில் உங்களுடைய கருத்துக்களைக் கேட்பதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நாளை வரை நடைபெற உள்ளது.