என்னடா ***..! நான் ஹெல்மெட் போடலனா உனக்கு பிரச்சினையாடா? ஹெல்மெட் போட சொன்னவரை மிரட்டிய போலீஸ்!
சென்னை : வாகன ஓட்டிகளிடம் கடுமை காட்டும் காவலர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததும், இதுகுறித்து கூறிய வாகன ஓட்டியை அவர் ஆபாசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது.
இருசக்கர வானங்களில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு சென்னை பெருநகர பகுதிகளில் கடந்த மே மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இது ஒருபுறம் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் மக்களின் பாதுகாப்புக்காகவே என்பதால் அதனை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

உயிரிழப்புகள்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னையில் மட்டும் 2021ஆம் ஆண்டில் நடந்த இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹெல்மெட் விழிப்புணர்வு
இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக காவல் துறையினரின் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் கட்டுப்பாடுகளை விதிக்கும் காவலர்களே இதனை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாகன ஓட்டிகளிடம் கடுமை காட்டும் காவலர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததும் இதுகுறித்து கூறிய வாகன ஓட்டியை அவர் ஆபாசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது.

சர்ச்சை வீடியோ
இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த காவலர் ஒருவரை அதே சாலையில் பயணித்த வாகன ஓட்டி ஒருவர் ஹெல்மெட் போடுமாறு அக்கறையுடன் கூறி இருக்கிறார். ஆனால் ஆத்திரமடைந்த அந்த காவலரோ அந்த வாகன ஓட்டியை வழிமறித்ததோடு ஒருமையில் மிகவும் ஆபாசமாக பேசி உள்ளார். உங்கள் நல்லதுக்கு தானே நான் சொன்னேன் என அந்த வாகன ஓட்டி கூறுகிறார்.

மிரட்டல்
ஆனால் அந்த காவலரோ, "நான் ஹெல்மெட் போடுவேன் போட மாட்டேன் உனக்கு என்னடா பிரச்சனை நீ ஹெல்மெட் போட சொன்னது தப்பு தாண்டா" என சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருக்கிறார். குறிப்பாக அந்த காவலர் சீருடையுடன் இருந்திருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ஹெல்மெட் அணிய சொன்னதற்காக காவலர் இளைஞரை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications