'விசில்' அடிக்க கூட அஞ்சும் விஜய்? சின்னம் கிடைத்தும் மௌனம் காக்கும் ஜனநாயகன்.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய கட்சிக்குத் தேர்தல் சின்னம் கிடைப்பது என்பது அக் கட்சியின் திருவிழாவாகக் கொண்டாடப்படும். ஆனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) விவகாரத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது.
நேற்று இந்தியத் தேர்தல் ஆணையம் தவெக-விற்கு 'விசில்' சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியது. இந்தச் செய்தியை கட்சியின் சமூக வலைதளப் பக்கங்கள் கொண்டாடினாலும், கட்சியின் தலைவர் விஜய் இன்னும் பொதுவெளியில் தோன்றி அந்தச் சின்னத்தை அறிமுகப்படுத்தவில்லை என்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சின்னம் உண்டு; தலைவர் எங்கே?
பொதுவாக ஒரு புதிய சின்னம் கிடைத்தால், அந்தத் தலைவர் ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி, அந்தச் சின்னத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது வழக்கம். விஜய்க்கு செய்தியாளர்களைச் சந்திப்பதில் விருப்பமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், குறைந்தபட்சம் 'விசில்' சின்னத்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையோ அல்லது ஒரு சிறிய வீடியோவையோ அவர் வெளியிட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜய் பல தலைவர்களுக்கு மாலை போடுவது போல.. இதையும் வீட்டில் இருந்தபடியே கூட செய்திருக்கலாம்.
தற்போது தவெகவின் அதிகாரபூர்வ பக்கத்தில் பகிரப்பட்டுள்ள 'விசில்' சின்னம், கட்சியின் நிர்வாகிகளால் (Admin) உருவாக்கப்பட்ட ஒரு கிராபிக்ஸ் படம் மட்டுமே. அதிலும் விஜய் இல்லை. இது தொண்டர்களிடையே ஒருவித ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாத மௌனம்: பின்னணி என்ன?
கடந்த ஒரு மாத காலமாக விஜய் எங்குமே தனது முகத்தைக் காட்டவில்லை என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். அவரது மௌனம் குறித்து எழுப்பப்படும் முக்கியக் கேள்விகள்:
சிபிஐ விசாரணை மட்டுமே: கடந்த ஒரு மாதத்தில் விஜய் பொதுவெளியில் தோன்றிய ஒரே இடம் சிபிஐ (CBI) அலுவலகம் மட்டும்தான். கரூர் விவகாரம் தொடர்பாக ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடந்த விசாரணையில் கலந்துகொண்டதைத் தவிர, அவர் வேறு எந்தப் பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
பொங்கல் கொண்டாட்டம் தவிர்ப்பு: கடந்த ஆண்டு தனது ரசிகர்களுடன் மிக விமரிசையாகப் பொங்கல் திருநாளைக் கொண்டாடிய விஜய், இந்த ஆண்டு பொங்கல் சமயத்தில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றிருந்தார். தமிழகம் திரும்பிய பிறகும் அவர் எந்தக் கொண்டாட்டப் புகைப்படத்தையும் வெளியிடவில்லை.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் புறக்கணிப்பு: விஜய்யின் அரசியல் பேச்சுக்களில் எப்போதும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் தாக்கம் இருக்கும். ஆனால், கடந்த வாரம் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாளின் போது, கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கும் நிர்வாகி தரப்பில் இருந்து ஒரு பதிவு மட்டுமே பகிரப்பட்டது; விஜய் நேரில் வரவில்லை.
என்ன காரணம்?
விஜய் இப்படி அமைதியாக இருக்க 4 காரணம் சொல்லப்படுகிறது.
1. விஜய் சிபிஐ விசாரணையால் நொந்து போய் இருக்கிறார். டெல்லி பிரஷர் அதிகம் உள்ளது.
2. அரசியல் அவருக்கு அலுப்பை, தொய்வை கொடுத்துவிட்டது.
3. ஜனநாயகன் சிக்கல் காரணமாக விஜய் அதிருப்தியில் உள்ளார்.
4. விசில் சின்னம் விஜய் அறிவிக்கும் முன் தேர்தல் ஆணையம் வழியாக கசிந்துவிட்டதால்.. விஜய் அப்செட்.
தேர்தல் நெருங்கும் வேளையில் 'அணுக முடியாத' தலைவர்?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஒரு கட்சியின் தலைவர் மக்களைச் சந்திப்பதையும், பொதுவெளியில் தோன்றுவதையும் தவிர்ப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
சிபிஐ விசாரணையின் அழுத்தம் காரணமா அல்லது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்காக (காங்கிரஸ் உடனான 100 தொகுதி பேச்சுவார்த்தை போன்றவை) அவர் ரகசியமாகச் செயல்படுகிறாரா என்பது தெரியவில்லை. இருப்பினும், "விசில்" சின்னம் கிடைத்தும் விஜய் இன்னும் அமைதி காப்பது, எதிர்க்கட்சிகளுக்கு விமர்சனம் செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications