பரந்தூரில் விமான நிலையம் வேண்டவே வேண்டாம்..அமைச்சர்களிடம் போராட்டக்குழுவினர் உறுதி
சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறியுள்ள போராட்டக்குழுவினர், அரசின் நடவடிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக கூறியுள்ளனர். ஓடையை மறித்து விமான நிலையத்தை ஏற்படுத்தினால் 13 கிராமங்களும் வெள்ளத்தினால் சூழப்படும் அபாயம் உள்ளதாகவும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அப்போது போராட்டக்குழுவினர் அமைச்சர்களிடம் தங்களின் கிராமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்காக நீரோடை தடுக்கப்பட்டால் 13 கிராமங்களுக்கும் வெள்ள அபாயம் ஏற்படும் என அமைச்சரிடம் எடுத்துக்கூறியதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2ம் சர்வதேச விமானம் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருக்கிறது. இந்த விமான நிலையத்திற்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், நீர்நிலைகள் கையகப்படுத்தப்பட உள்ளன.
சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப அறிக்கையும் தயார் செய்ய தமிழ்நாடு தொழில்வளர்ச்சித்துறையானது டெண்டர் கோரியிருந்தது. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் விமான நிலையம் கட்டுவதற்கு 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 145 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நீடித்து வருகிறது.
ஐந்து வருடம் கழித்து சீரியலிலும் நிஜத்திலும் கர்ப்பம்.. சன் டிவி கதாநாயகி வளைகாப்பு..உருக்கமான பதிவு
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் குழுவினருடன் அமைச்சர்கள் குழுவானது பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்றைய தினம் தலைமைச்செயலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 13 கிராமத்தை சேர்ந்த பிரதிநிதிகளும், அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழுவினர்,
விவசாயத்திற்கும் தங்களது வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு இல்லாதவாறு, நிலம் கையகப்படுத்தாமல் மாற்று வழியில் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாக கூறினர்.
விமான நிலையத்திற்காக நீரோடையை மறித்து கட்டுமானப்பணிகள் கட்டப்பட்டால் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் என்றும் 13 கிராம மக்களும் வெள்ள பாதிப்பிற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர்களுடன் எடுத்துக்கூறியதாக தெரிவித்தனர்.
பேரணியின் போது ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நேற்று பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தாமோ. அன்பரசன், எ.வ.வேலு ஆகியோரிடம் எங்கள் கிராமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக்கூறியுள்ளோம். அமைச்சர்கள் முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளனர். அமைச்சர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையைப் பொறுத்து எங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் அதுவரை பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மாலை நேர போராட்டங்கள் நடைபெறும் என்றும் 13 கிராம போராட்டக்குழுவின் தலைவர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.