அண்ணா சாலையில் திரண்ட தலைவர்கள்.. பிரமாண்ட மனிதச் சங்கிலி.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முழக்கம்!
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பில் 17 அரசியல் கட்சிகள், 44 இயக்கங்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் மனித சங்கிலி பேரணியில் வைகோ, திருமாவளவன், கி.வீரமணி, வேல்முருகன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் 17 கட்சிகளும் 44 இயக்கங்களும் பங்கேற்பார்கள், பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர் என திருமாவளவன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயலும் பிரிவினைவாதிகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்பதை வலியுறுத்தி இந்த சமூக நல்லிணக்கப் பேரணி நடைபெறுகிறது.
சென்னையில் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
'தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு தேசிய அளவில் சமூக பொறுப்பு உருவாகியுள்ளது': திருமாவளவன் ட்விட்!
பேரணி
காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழகத்தில் 51 இடங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்டது. அதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுப்பில் சமூக நல்லிணக்க பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு அடுத்த மாதம் அந்தப் பேரணி நடைபெற இருக்கும் நிலையில், இன்று சமூக நல்லிணக்கப் பேரணியை விசிக உள்ளிட்ட கட்சிகள் நடத்துகின்றன. இதுதொடர்பாக அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்திருந்தனர்.
மதத்தின் அடிப்படையில்
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் இன்று சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் புதிய வரலாறு படைக்கும். பல லட்சம் பேர் மனிதச் சங்கிலியில் பங்கேற்கின்றனர் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த இடங்களில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து கூட்டாகக் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடங்கி இன்னொரு குறிப்பிட்ட இடம் வரையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் கைகளைக் கோர்த்து நிற்க வேண்டும். அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் யாவரும் மனிதச் சங்கிலியில் பங்கேற்க வேண்டும் என கூட்டாக அறிக்கை விடுக்கப்பட்டது.
சென்னையில்
அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகில் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநிலத் தலைவர்கள் திருமாவளவன், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சாந்தி தியேட்டர் வரை வடசென்னை மாவட்டத்திற்கு உள்ளிட்ட தோழர்கள் சங்கிலியாக அணிதிரண்டுள்ளனர். சாந்தி தியேட்டர் முதல் எல்ஐசி வரை மத்திய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மனிதச் சங்கிலியாக அணிதிரண்டுள்ளனர். எல்ஐசி முதல் ஆயிரம் விளக்கு மசூதி வரை தென்சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மனிதச் சங்கிலியாக திரண்டுள்ளனர்.
முழக்கம்
ஊபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கூட்டத்தை வேரறுப்போம் என இந்த மனிதச் சங்கிலி பேரணியில் முழக்கம் எழுப்பப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் மனித சங்கிலி இயக்கத்தை நடத்த விசிக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். 5 மணியளவில் மனித சங்கிலி முடிந்தவுடன் அமைதியான முறையில் அனைவரும் கலைந்து செல்ல வேண்டுமென ஏற்கனவே திட்டமிட்டபடி, சற்று நேரத்தில் மனிதச் சங்கிலி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.