வன்னியர் சங்க தலைவர் தலையை வெட்டுவேன்..வெலவெலக்க வைத்த விசிக நிர்வாகி! திருமா எடுத்த அதிரடி ஆக்சன்
சென்னை: கடலூரில் இரு சமூக இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் விசிக கொடிக் கம்பம் உடைக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் வெளியானது. இதனையடுத்து வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாமக குற்றம் சாட்டியது. இந்நிலையில் வரம்பு மீறி பேசியதாக விசிக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவரான திருமாவளவன்.
சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த செல்லத்துரை தீபாவளிக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்த பொழுது தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.

தனது தம்பியோடு பத்திரிக்கை வைத்துவிட்டு உடையூர் வழியாக தனது ஊருக்கு வந்து கொண்டிருந்த பொழுது ஆறு இளைஞர்கள் வழித்தடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் போக வேண்டும் எங்களுக்கு வழிவிடுங்கள் என்று செல்லதுரை கேட்ட நிலையில் வேண்டுமானால் வயலில் இறங்கி நடந்து போங்கள் என்று ஏளனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் மீண்டும் வழி கேட்கவே அவர்கள் ஆறு பேரும் சேர்ந்து செல்லத்துரையை மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அடித்தவர்களில் ஒருவன் அலைபேசியில் செய்தி சொல்லி பத்துக்கும் மேற்பட்டவர்களை அழைத்து, அவர்களும் சேர்ந்து நின்று தாக்க பலத்த காயங்களோடு முகத்திலும் உடலிலும் ரத்தம் வழிய செல்லத்துரை மூர்ச்சையாகியிருக்கிறார்.
மேலும் அவரை தாக்கிய வீடியோவையும் வெளியிட்டனர். இதனால் அந்த பகுதியில் சாதி ரீதியான மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தற்போது இளைஞர்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்த செல்லத்துரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஊரின் மையப்பகுதியில் இருந்த கொடிக்கம்பங்களை அடித்து உடைத்தனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் உடைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சாதிய வன்மத்துடன் அடித்து உடைத்ததாக சமூக வலைதளங்களில் அதிகமாக அந்த புகைப்படம் வீடியோ பகிரப்பட்டது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை உடைத்ததை கண்டித்து புவனகிரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நிர்வாகி ஒருவர் வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழியின் தலையை வெட்டி எடுப்போம் என பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாமக நிறுவனரான ராமதாஸும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வரம்பு மீறி பேசியதாக விசிக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவரான திருமாவளவன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் விசிக கொடி மற்றும் கொடிக் கம்பத்தை அறுத்தெறிந்து, தொடர்ந்து இரு மாதங்களாகச் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்திவந்த சாதிவெறி சக்திகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்து கடந்த 04-11-2024 அன்று புவனகிரியில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வ.க. செல்லப்பன் மற்றும் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநிலத் துணை செயலாளர் செல்விமுருகன் ஆகியோர், காவல்துறையைக் கண்டிக்கும் ஆவேசத்தில் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உரையாற்றியுள்ளனர். ஆகஸ்ட்-23 அன்று கட்சியின் கொடியை அறுத்தவர்கள் , அக்டோபர்-15 அன்று கொடிக் கம்பத்தை அடியோடு அறுத்தவர்கள் ஆகியோர் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர்களிருவரும் தமது பேச்சில் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், அப்பாவி வன்னியர் சமூக மக்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாமக மாவட்ட செயலாளர், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் மற்றும் விசிக கொடிக்கம்பத்தின் பீடத்தை இடிக்க முயற்சித்த பெண் ஆகிய தனிநபர்களுக்கு எதிராகவும் பேசியுள்ளனர். அதே வேளையில், அவர்கள் இருவரின் பேச்சுகளும் இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, வ.க. செல்லப்பன் மற்றும் செல்வி முருகன் ஆகிய இருவரும் மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்கப்படும் இந்நாளிலிருந்து பதினைந்து நாள்களில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்னர், இது குறித்த விசாரணையில் இருவரும் உரிய விளக்கமளிக்க வேண்டுமென அறிவிக்கப்படுகிறது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications