திகுதிகு திருப்பரங்குன்றம்.. யாருங்க இந்த முனியாண்டி?.. அதிமுகவினருக்கே பார்க்கனும் போல இருக்காம்!
Recommended Video
சென்னை: ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோதே.. பரபரப்பாக பேசப்பட்ட தொகுதி திருப்பரங்குன்றம்! இப்போது இந்த தொகுதியை கைப்பற்றப் போவது யார் என்பதில்தான் பலத்த போட்டி!
ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது, திருப்பரங்குன்றம் தொகுதியில், நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், 70 ஆயிரம் ஓட்டுகள் பெற்றிருந்தார்.
கடந்த 2016-லேயே திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற வேண்டியவர் டாக்டர் சரவணன் என்பது திமுகவின் கணிப்பு. அதனால் இவ்வளவு நாள் காத்து கிடந்த சரவணனுக்குதான் மீண்டும் திருப்பரங்குன்றத்தில் சீட் தரப்பட்டது.
ஒட்டப்பிடாரம்.. ஜெ.வை வென்று வேட்பாளரான மோகன்.. அலட்டிக்கொள்ளாத திமுக.. அதிரடி காட்டிய அமமுக
மகேந்திரன்
அதேபோல, அமமுக சார்பில் போட்டியிட போவது மகேந்திரன் என்பவர். இவருக்கு டிடிவி சும்மா ஒன்றும் சீட் தந்துவிடவில்லை. தொகுதியின் சாதீய வாக்குகளை பெற்றுள்ளவர். அமமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர்.
உசிலை செல்லப்பிள்ளை
அது மட்டும் இல்லை.. ஒருமுறை டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டபோது அதனை கண்டித்து ஒருபெரிய ஆர்ப்பாட்டத்தை உசிலம்பட்டியில் நடத்தி அமமுகவையே திரும்பி பார்க்க வைத்தவர். அந்த அளவுக்கு தீவிரமான தினகரன் விசுவாசி இவர். உசிலம்பட்டியில் நகராட்சி தலைவராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தவர். அதனால்தானோ என்னவோ இவரை "உசிலையின் செல்லப்பிள்ளை" என்று அங்கு கூப்பிடுவார்கள். பணபலம், சாதி பலம், செல்வாக்கு, கட்சி மீது விசுவாசம் இது எல்லாவற்றையும் பார்த்துதான் தினகரன் இவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்.
ஆளுக்கு ஒரு வேட்பாளர்
வழக்கம்போல, திமுக, அமமுகவைவிட வேட்பாளரை அறிவிப்பதில் தலையை பிய்த்து கொண்டது அதிமுகதான். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு யாரை வேட்பாளராக்குவது என்பதில் குழப்பம் நீண்டு கொண்டே போனது. செல்லூர் ராஜு ஒரு பக்கம், ஆர்பி உதயகுமார் ஒரு பக்கம், ராஜன் செல்லப்பா ஒரு பக்கம் என ஆளுக்கு வேட்பாளரை கை காட்டுகிறார்கள்.
போஸ் குடும்பம்
ஆளும் தரப்பு, அரசியல் பலம், தொகுதியில் செல்வாக்கு போன்றவைகளின் நெருக்கடி ஒரு பக்கம் என்றால் உயிரிழந்த எம்எல்ஏ போஸ் குடும்பத்தினரும் சீட் கேட்டு நெருக்கடி தந்தார்கள். அதனால் இப்படி நான்கு பக்கமும் அணைகட்டப்படுவதால் மதுரை தொகுதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஆனது. இதில் யாருக்கு சாதகமாக நடந்து கொண்டாலும் விவகாரம்தான் வெடிக்கும் என்பதையும் அதிமுக நன்றாகவே உணர்ந்திருந்தது. அதனால்தானோ என்னவோ சம்பந்தமே இல்லாமல் முனியாண்டியை வேட்பாளராக அறிவித்துள்ளது.
விருப்பமனு
முனியாண்டி என்பவர் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன அவனியாபுரம் பகுதிக் கழக செயலாளராக உள்ளார். பெரிய பெரிய தலைகள் விருப்ப மனு அளிக்கவும், சீட் வாங்கவும் மல்லுக்கட்டும்போது, நமக்கு எங்கே கிடைக்க போகிறது என்ற ரீதியில், பெயரளவுக்கு வந்து தானும் ஒருவிருப்ப மனுவை அளித்துவிட்டு போனார். ஆனால் இப்படி அவர் வேட்பாளராவர் என்பது அவருக்கே கொஞ்சம் ஸ்வீட் ஷாக்தான்!
மானப்பிரச்சனை
பலம் பொருந்திய ஆப்ஷன்களைவிட முனியாண்டிக்கு செல்வாக்கு கொஞ்சம் குறைவு என்றாலும், கட்சியே அனைத்து செலவையும் செய்து, முனியாண்டியை வெற்றி பெற வைக்கும் என்றே தெரிகிறது. காரணம்.. இது அதிமுகவின் மானப்பிரச்சனையும்கூட! ஆக.. திமுக, அதிமுக, அமமுக.. இவர்களில் யாருக்கு போக போகிறது திருப்பரங்குன்றம் என்பது அந்த முருகனுக்கு மட்டுமே வெளிச்சம்!