சூப்பர்ல.. அவராச்சும் ஒரு ஓட்டு வாங்கினார்.. "கொஞ்சம் பிசியாயிட்டேன், அதான்".. ஷாக் தந்த வேட்பாளர்
நெமிலி சுயேச்சை வேட்பாளருக்கு ஒரே ஒரு ஓட்டு கூட விழவில்லை
சென்னை: கோவையிலாவது ஒருவருக்கு ஒரே ஒரு ஓட்டு விழுந்துள்ளது.. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவர் அதற்கு மேல் ஷாக் தந்துள்ளார்.
நடந்து முடிந்துள்ள மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 120க்கும் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்றள்ளது..
1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 800க்கும் அதிகமான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன..
கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை.. உள்ளாட்சி இடைத் தேர்தல் ரிசல்ட்டை பாருங்கள்: வேட்பாளர் பெருமிதம்
தேர்தல்
அதேபோல, ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர் ஆகிய பதவிகளிலும் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்... இதன் முழுமையான முடிவுகள் இன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை வாக்கு எண்ணிக்கையில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என்ற இரு பதவிகளிலுமே ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலையில் இருந்து வருகிறது..
அதிமுக
அதுமட்டுமல்ல, திமுக அனைத்து பதவிகளிலும் இரண்டு இலக்க எண்களில் முன்னிலை வகித்து வர, அதிமுகவோ, ஒற்றை இலக்கத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.. அதேசமயம் இந்த தேர்தல் ரிசல்ட்டானது நிறைய வித்தியாசமான நிகழ்வுகளை ஆங்காங்கே ஏற்படுத்தி வருகிறது.. கோவை பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் என்பவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே வாங்கியுள்ளதாகவும், அவரது குடும்பத்தில் 5 வாக்குகள் உள்ள நிலையில் அவர்களே கார்த்திக்கை நம்பவில்லை என்றும் எதிர்கட்சிகள், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது...
அண்ணாமலை
இதற்கு பாஜக அண்ணாமலை பதில் தந்திருந்தாலும், டிவிட்டரில் ஒத்த ஓட்டு பாஜக என்றும் ஹேஷ்டேக் டிரெண்டானது. அதேபோல ஒரு சம்பவம், திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. பூந்தமல்லி ஒன்றியம் நெமிலிச்சேரி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் 171 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்... இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜானகிராமன் என்பவருக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லையாம். இதை பார்த்து வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்கள்.
சுயேச்சை
அவராவது ஒரு ஓட்டு, இவர் அதுகூட இல்லையே என்று பலரும் இந்த நிகழ்வை விமர்சித்து வருகிறார்கள்.. ஆனால், இதுகுறித்த சம்பந்தப்பட்ட சுயேட்சை வேட்பாளர் ஜானகிராமன் சொல்லும்போது, "தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்துட்டேன்.. அதனால், ஓட்டு போட மறந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.. இவர்தான் பிஸியாயிட்டார், அந்த வேட்பாளரின் குடும்பத்தில் உள்ளவர்களாவது ஓட்டு போட்டிருக்கலாமே என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.