திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு.. போலீசாருக்கு உதவிய ஏஐ.. குற்றவாளியைப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர்: திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை காவல்துறை பிடிக்க ஏஐ தொழில்நுட்பம் மற்றும் பொதுமக்கள் உதவி இருப்பது தெரிய வந்துள்ளது. 30 வயதான நபரைக் கைது செய்த போலீசார், தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.
திருவள்ளூர் அருகே ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஜூலை 12ஆம் தேதி மர்ம நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்குச் சென்ற சிறுமியை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், திடீரென அவரை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவரிடம் இருந்து எப்படியோ தப்பித்து அந்த சிறுமி பெற்றோரிடம் சென்றுள்ளார்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாருக்கு துப்பாகக் கிடைத்த ஒரேயொரு சிசிடிவி காட்சி இருந்தாலும், வேறு எங்கும் சிசிடிவிக்கள் இல்லாதது விசாரணையில் தொய்வை ஏற்படுத்தியது. இதன்பின் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நேரடி மேற்பார்வையில் முதலில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளியைத் தேடி வந்தனர்.
ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தனிப்படைகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளில் தெளிவற்று இருந்த குற்றவாளியை, ஏஐ தொழில்நுட்பத்தை உதவியுடன் போலீசார் தெளிவாக உருவாக்கி இருக்கின்றனர். இதற்காகவே குற்றவாளியைப் பிடிக்க சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.
தெளிவான புகைப்படம் உருவாக்கப்பட்ட பின் அதனை வெளியிட்ட போலீசார், தகவல் கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்தனர். இதன்பின் தேடப்படும் நபரின் உருவ அமைப்பு சூலூர்பேட்டையில் உள்ள தாபா ஒன்றில் பணியாற்றும் நபருடன் ஒத்துப் போவதாக காவல்துறை எண்ணிற்கு ஒரு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் கிடைத்ததை அடுத்து சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது குற்றவாளியைச் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இதன் பின் நேற்று விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று காலை தாபாவில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது கைதான நபரை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். 14 நாட்களாகக் குற்றவாளியைக் கண்டறிய முடியாமல் போலீசார் திணறிய போது, ஏஐ தொழில்நுட்பம் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் காவல்துறை ஒருவரைக் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications