இதுவரை 12 பேர்.. ஜெ.வும் இல்லை.. கருணாநிதியும் இல்லை.. புது முதல்வர் யாரு?
சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் ஆளுமைகளான முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாமல் நடக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் இதுவாகும்.
தமிழக அரசியலில் அரசியல் தலைவர்கள் மீது மிகப் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியவர் எம்ஜிஆர். சினிமாவில் நம்பர் ஒன்னாக இருந்த சமயத்திலேயே அரசியலுக்கு வந்தவர் என்பதால், எம்ஜிஆர் மீது மக்களிடையே ஈர்ப்பு ஏற்பட்டது. இது அரசியலிலும் அவருக்கு உதவியாக அமைந்தது. எம்ஜிஆரி.,ன் பெயருக்காகவே அவருக்கு ஓட்டு போட்ட பாமர மக்கள் ஏராளம்.
இதே பிம்பம் அவரது அரசியல் வாரிசாக வந்த ஜெயலலிதாவிற்கும், தனிக் கட்சி துவங்கிய கருணாநிதி மீதும் ஏற்பட்டது. இருவருமே தங்களை மிகப் பெரிய இரு பெரும் சக்திகளாக உருவாக்கிக் கொண்டவர்கள். ஆளும் கட்சி என்றால் ஒன்று திமுக.,வாக இருக்கும், இல்லை அதிமுக.,வாக இருக்கும். இந்த நிலை தான் பல காலமாக தமிழகத்தில் இருந்து வருகிறது.

ஜெ., கருணாநிதி மறைவு
2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. அதே ஆண்டு திடீரென உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, டிசம்பர் 5 ம் தேதி காலமானார். இதே போன்று 2018 ம் ஆண்டு, வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7 ம் தேதி காலமானார்.

முதல் சட்டசபை தேர்தல்
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் அசைக்க முடியாத ராஜதந்திரிகளாக இருந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாமல் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். இதனால் வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை, கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவற்றில் தற்போதுள்ள தலைவர்கள் எந்த மாதிரி முடிவு எடுக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

அனல் பறக்கும் பிரசாரம்
ஜெயலலிதா, கருணாநிதி பங்கேற்றும் பொதுக்கூட்டம் என்றாலே பிரம்மாண்டத்திற்கும் பஞ்சமிருக்காது, மக்கள் வெள்ளத்திற்கும் பஞ்மிருக்காது. அவர்களின் அனல் தெறிக்கும் பேச்சை கேட்ட கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் காத்து கிடக்கும். அதே போன்ற அனல் பறக்கும் பிரசாரம் இந்த தேர்தலில் இருக்குமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேசிய அரசியலை அதிர வைத்த ஜெ.,
2016 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மோடியா...லேடியா என மத்திய அரசை நேரடியாக தாக்கி ஜெயலலிதா பேசிய பேச்சு தேசிய அரசியலையே அதிர வைத்தது. அதே போன்ற துணிச்சலான, ராஜதந்திர நடவடிக்கைகள் உள்ளது என்பதை தமிழக மக்கள் ஆராய்ந்து பார்க்க துவங்கி உள்ளனர்.

சமூக வலைதளங்களின் பங்கு
தற்போது வளர்ச்சி அடைந்திருக்கு சமூக வலைதளங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியன மக்களிடையே அரசியல், தேர்தல் குறித்த அதிக புரிதலை ஏற்படுத்தி உள்ளன. இதனால் சரியான வேட்பாளரை அரசியல் கட்சிகள் தேர்வு செய்கின்றனவோ இல்லையோ, மக்கள் சரியாக தேர்வு செய்வார்கள் என்றே நம்பலாம்.

புதிய முதல்வர் யாரோ
சென்னை மாகாணமாக இருந்தது முதல் தற்போது வரை பி.சி. குமாரசாமி ராஜா முதல் எடப்பாடி பழனிச்சாமி வரை 12 பேரை முதல்வர்களாகக் கண்டுள்ளது தமிழகம். இப்போது தமிழகம் காணப் போகும் 13வது முதல்வர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் என்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ் மட்டுமே. புதிய கட்சி இந்த முறை ஆட்சியமைக்குமா.. புது முதல்வர் வருவாரா அல்லது பழைய கட்சி புதிய முதல்வரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications