வரலாற்றிலேயே முதல் முறை.. தெரிஞ்சே தவறு செய்துள்ளது அமலாக்கத்துறை.. செந்தில் பாலாஜி வழக்கில் பரபர!
சென்னை: இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை மீறி காவலில் வைத்து விசாரிக்க கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என செந்தில்பாலாஜி மனைவி தரப்பு ஐகோர்ட்டில் பரபர வாதங்களை முன்வைத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்தார்.

சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதையடுத்து, அவருக்கு ஏற்பட்ட உடல்நிலைக் குறைபாடு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜிக்கு நேற்று காலை பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஹேபியஸ் கார்ப்பஸ்: இதற்கிடையே, சரியான சட்ட விதிமுறைகளின் படி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வில்லை என்றும், இடைக்கால ஜாமின் வழங்கிடவும், சிகிச்சைக்காக அவரை காவிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவும் உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா கடந்த 14ஆம் தேதியன்றே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்கால ஜாமின் வழங்க மறுத்தது. இருப்பினும், சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கின் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவத்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
பரபர வாதங்கள்:அப்போது அமலாக்கத் துறை தனது வாதத்தில், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று முறையிட்டது. இதையடுத்து நேற்றைய உச்ச நீதிமன்ற விசாரணையை மேற்கோள் காட்டி வாதாடிய செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது முறையான சட்ட விதிமுறைகள் பின்பற்றவில்லை. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று வாதிட்டார்.
இந்தியாவிலேயே முதல் முறை: மேலும், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றவும், நீதிமன்ற காவலில் நீடிக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. இது தெரிந்தே காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை மீறி காவலில் வைத்து விசாரிக்க கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை என என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
முன்னதாக, செந்தில் பாலாஜியிடம் 15 நாட்கள் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதி 8 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். மருத்துவர்களின் அனுமதியோடு விசாரணை நடத்த வேண்டும், குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 5 நாட்களாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த தீவிரம் காட்டியது. ஆனால் செந்தில் பாலாஜியின் உடல்நிலை காரணமாக அமலாக்கத்துறையால் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை. இதனை சென்னை முதன்மை நீதிமன்றத்திலும் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications