இந்த கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.. லோக்சபா தேர்தல் ரிசல்ட் பற்றி நடிகர் விஷால் கணிப்பு!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கட்சிக்கு பெரிய வெற்றி கிடைக்கும், இழுபறி நிலையெல்லாம் வராது என நடிகர் விஷால் கணித்துள்ளார்.
கடந்த பல வருடங்களாகவே, விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில், தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து, தன் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் சூட்டி, புதிய அறிக்கையும் வெளியிட்டு, தன் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தினார் நடிகர் விஜய். வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார் விஜய். விஜய்யைத் தொடர்ந்து, நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விஷால் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், மக்கள் நல இயக்கத்தின் மூலம் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை. வரும் காலக்கட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுத்தால் மக்களுக்காக குரல் கொடுக்கவும் தயங்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால், "அரசியல் என்பது சமூக சேவை. சினிமா துறை, மற்ற துறைகளைப் போல அரசியல் கிடையாது. இது மக்களுக்காக பணி செய்யும் சேவை. ஏதோவொரு வகையில் நாம் அனைவருமே நல்லது செய்திருப்போம். நாம் எல்லோருமே அரசியல்வாதிகள் தான்.
2026ல் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லவோ, வருவேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருக்கவோ மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. அந்தந்த நேரத்தில் காலகட்டத்தில் என்ன முடிவு எடுக்கிறேனோ அதைப் பொறுத்துத்தான். நான் சினிமாவுக்கு வந்தபோது, எனக்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை கொடுத்த ராதாரவி அண்ணனை எதிர்த்து நிற்பேன் என கனவிலும் நினைத்ததில்லை. நடிகர் சங்க பொதுச் செயலாளர் ஆனேன். எல்லாம் அந்தந்த சூழலில் எடுத்த முடிவு தான்." என்றார்.
எதிர்வரும் 2024 லோக்சபா தேர்தலில், நாடு தழுவிய அளவில் எந்தக் கட்சி வெற்றி பெறும், தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விஷால், "இந்த தேர்தல் முடிவுகள் இழுபறி நிலையாக இருக்காது. கண்டிப்பாக ஒரு கட்சிக்கு பெரிய வெற்றியாக இருக்கும். அது எந்தக் கட்சி என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்" எனத் தெரிவித்தார்.
தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பிரச்சாரம் எல்லாம் செய்ய மாட்டேன். கண்டிப்பாக ஓட்டு போடுவேன். வாக்களித்த பிறகு யாருக்கு ஓட்டு போட்டேன் என உறுதியாகச் சொல்வேன். சொன்னால் ஜெயிலில் போடுவார்கள் என்றெல்லாம் இல்லை. நான் ஏற்கனவே, கேப்டனுக்கு ஓட்டு போட்டேன் என வெளிப்படையாக மேடையிலேயே சொல்லி இருக்கிறேன். யார் எனது தொகுதியில் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஓட்டு போடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications