இருப்பது போதாதென்று இது வேறு... சசிகலா பெயரில் அலப்பறை... தியாகத் தலைவி சின்னம்மா பேரவை..!
சென்னை: சசிகலாவுக்கு இருக்கும் பிரச்சனைகள் போதாது என அவர் பெயரில் பேரவை ஒன்றை தொடங்கி அதற்கு மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமனம் படுஜோராக நடைபெற்று வருகிறது.
சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராஜனின் தீவிர ஆதரவாளரான பொன்.ஆனந்த் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன் தியாகத் தலைவி சின்னம்மா பேரவை என்ற அமைப்பை தொடங்கியிருந்தார். அமைப்பை தொடங்கியதோடு சரி அதற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய செயல்பாடுகள் எல்லாம் இல்லை.

சசிகலா பெயரில் பேரவை தொடங்கப்பட்டதில் டிடிவி தினகரனுக்கு உடன்பாடில்லை என்றாலும் எதற்கும் இருந்துட்டு போகட்டும் என்ற எண்ணத்தில் விட்டுவிட்டார். இப்போது என்னவென்றால் அதன் நிறுவனர் பொன். ஆனந்த் என்பவர் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்து வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகும் போது தியாகத் தலைவி சின்னம்மா பேரவை சார்பில் ஒரு லட்சம் பேரை திரட்டி வரவேற்பு தருவோம் என கூறிவருகிறார். ஏற்கனவே சசிகலாவை மையமாக வைத்து அதிமுக, அமமுக, திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் அரசியல் செய்து வரும் நிலையில் அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளது தியாகத் தலைவி சின்னம்மா பேரவை.

தமிழகம் செல்கிற நிலையை பார்த்தால் வீதிக்கு ஒரு சங்கமும், ஊருக்கு ஒரு கட்சியும் தொடங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனிடையே தென்னிந்தியாவில் லெட்டர்பேட் கட்சிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications