தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கவில்லை...ஆதாரத்துடன் விளக்கிய சுகாதாரத்துறைச் செயலர்
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா தடுப்பூசி 2 தவணை போட்டவர்களில் 4 சதவிகிதம் பேர் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளதாக டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.. அதே போல முதல் தவணை போட்டவர்களில் 9 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி போடாதவர்கள் 87 சதவிகிதம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் 6வது கட்டமாக இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கூடாது என்கிற தவறான தகவல் இருப்பதால், அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்படுகிறது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 50,000 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 1.8 கோடி பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றார். 57 லட்சம் பேர் இதுவரை இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. சிலர் இன்னமும் தனிமைப்படுத்துதலில் கவனக்குறைவாக உள்ளனர். ஒரு வீட்டில் கொரோனா பாதித்த நபர் இருந்தால் வீட்டில் உள்ள பிறர் வெளியே சுற்றுகின்றனர்.
நோய் கட்டுப்பாட்டு வழிகளை நாம் பின்பற்றியதால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. இதனை மக்கள் உணர வேண்டும். பொது சுகாதார வல்லுநர்களின் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான அறிகுறி இல்லை என்றார்.
ரஷ்யா, பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற இடங்களில் கொரோனா ஏறுமுகமாக இருக்கிறது. எனவே வருங்காலத்தில் கொரோனா தொற்றைத் தடுக்க மக்கள் விழா காலங்களில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கொரோனா மூன்றாவது அலை வராது என்று கூறமுடியாது. மூன்றாவது அலை வருமோ அல்லது வராதோ என்ற எண்ணத்தை விட்டு கொரோனா தொற்றைத் தடுக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்திய அளவில் 100 கோடி அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நிலையில், மீண்டும் மீண்டும் தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவது நல்லதல்ல என்று கூறிய டாக்டர் ராதாகிருஷ்ணன். முகக்கவசம் கொரோனாவைத் தடுக்கும் அரண் என்று நாம் உணர வேண்டும். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசியும், முகக்கவசமும் முக்கியம். டெங்கு நோயைக் கட்டுப்படுத்தவும் மழைக்கால நோய்களைக் கட்டுப்படுத்தவும் அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி 2 தவணை போட்டவர்களில் 4 சதவிகிதம் பேர் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளனர். அதே போல முதல் தவணை போட்டவர்களில் 9 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி போடாதவர்கள் 87 சதவிகிதம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் உயிரிழக்கின்றனர் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

நடிகர் விவேக்கின் மரணம் குறித்து தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆய்வு செய்த மத்திய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17ஆம் தேதி விவேக் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை. ஏப்ரல் 15ஆம் கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் ஏப்ரல் 17ஆல் உயிரிழந்தார். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மீண்டும் தொற்றுக்கு ஆளானவர்கள் இறக்கவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக எய்ம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications