அண்ணாமலை ஆர்டர்- தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டக ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் பாஜக புகார்!
சென்னை: தமிழக அரசின் ஊட்டச்சத்துப் பெட்டகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் தமிழக பாஜக நிர்வாகிகள் இன்று புகார் கொடுத்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசு மீது ஊழல் புகார்களை முன்வைத்தார். இந்த ஊழல் புகாரில் ஒன்றுதான் தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகம் தொடர்பானது.
பாவம் அண்ணாமலை.. கனவாவது காணட்டும் விட்டுருங்க.. கலாய்க்கும் காங்கிரஸ் திருநாவுக்கரசர்
அண்ணாமலை புகார்
இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பில் தனியார் ஹெல்த் மிக்ஸ் பொருளுக்கு பதிலாக ஆவின் பொருளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. பின்னர் இந்த முடிவு மாற்றப்பட்டது. இதன் மூலம் தமிழக அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மா.சு. மறுப்பு
இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்திருந்தார். இது தொடர்பாக மா.சுப்பிரமணியன் கூறுகையில், டெண்டர் பணிகள் முடியும் முன்பே ஊழல் புகார் கூறுவதை ஏற்க முடியாது. இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. யூகத்தின் அடிப்படையில் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அண்ணாமலை அறிவுப்பூர்வமாக புகார் தெரிவிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றார்.
அண்ணாமலை வீடியோ
இதற்கும் பதில் தரும் வகையில் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், தி.மு.க அரசு கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கக்கூடிய சத்துணவு பெட்டகத்தில் செய்திருந்த ஊழல்குறித்து நாங்கள் பேசியிருந்தோம். முறைகேடான கம்பெனிகளுக்கு எப்படி கங்கனம் கட்டிக்கொண்டு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று பேசியிந்தோம். அதற்குப் பல அமைச்சர்கள் விளக்கம் அளித்திருந்தார்கள். அவை அனைத்துமே நகைப்புக்குரிய வகையில்தான் இருந்தது. இவர்கள் இன்னும் தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வின் ஊழல் தொடர்பான ஆதாரம் இதோ.... எங்களின் முதல் குற்றச்சாட்டு... பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனத்திற்கு மறுபடியும் நீங்கள் இந்த டெண்டரில் வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். கருப்பு பட்டியலில் வைத்துள்ளோம் எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின், எதற்றாக இந்த அனிதா டெக்ஸ்காட்டை மீண்டும் இந்த டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
போலீசில் புகார்
அத்துடன் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்படும் எனவும் அண்ணாமலை கூறியிருந்தார். இதனடிப்படையில் தமிழக பாஜக துணைத் தலைவர் பால் கனகராஜ் தலைமையிலான நிர்வாகிகள் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் ஊட்டச்சத்துப் பெட்டக ஊழல் தொடர்பாக புகார் அளித்தனர்.இது தொடர்பான ஆவணங்களையும் போலீசில் கொடுத்தனர்.