வாழ்த்து சொல்ல வந்தேன்.. கூட்டணிக்கு மவுனம்.. கருப்பர் கூட்டம் மீது காட்டம்.. இதுதான் எல். முருகன்!
சென்னை: கருப்பர் கூட்டத்தை கைது செய்ய வேண்டும். ஒரு சிலரை கைது செய்து பின்னர் விடுவித்துள்ளனர். மேலும் முழு விசாரணை நடத்தி இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அந்தக் கட்சி அறிவித்து இருந்தது. இந்த நிலையில் கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வரின் இல்லத்திற்கு எல். முருகன் சென்று இருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சுமார் 20 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தேர்தல் நேரத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
சந்திப்பை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், ''அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன். கருப்பர் கூட்டத்தை கைது செய்ய வேண்டும். ஒரு சிலரை கைது செய்து விடுதலை செய்துள்ளனர். மேலும் முழு விசாரணை நடத்தி இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். மேலும், வேளாண் சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்'' என்றார்.
தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி குறித்து பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு எல். முருகன் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
இதற்கு முன்னதாக அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் பாஜக எதிர்வரும் தேர்தலிலும் இதே கூட்டணியை தொடரும் என்று எல்.முருகன் தெரிவித்து இருந்தார். ஆனால், இதற்கு நேர்மாறாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ''கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், தேர்தல் நேரத்தில் அதிமுக, பாஜக முதல்வர் வேட்பாளர் யார் என்பது உறுதி செய்யப்படும். திமுகவுடனும் பாஜக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்து இருந்தார். இது தமிழக அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தி இருந்தது.
திண்டுக்கல் சிறுமி பாலியல் கொலை...தமிழக அரசு மேல்முறையீடு செய்ய மநீம கோரிக்கை!!
இந்த சூழலில்தான் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எல். முருகன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.