10 வருஷம் கழித்து ஒரு வெள்ளை அறிக்கை.. பக்கா பிளானுடன் பிடிஆர்.. பரபரப்பில் நிதியமைச்சகம்
சென்னை: 10 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டசபையில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த வெள்ளை அறிக்கையில் என்ன அம்சங்கள் இடம் பெறும் என்பது குறித்துதான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன, ஏன் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம்?

வெள்ளை பேப்பர்
வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசோ அல்லது ஒரு அமைப்போ ஒரு விவகாரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வெள்ளை அறிக்கை மூலம் அதை வெளியிட்டோரின் குறிக்கோளை மக்கள் அறிந்துகொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும். நிதி சார்ந்த விவகாரங்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான எந்த விஷயத்திலும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வெள்ளை பேப்பர் எப்படி சுத்தமாக இருக்குமோ அப்படி முழுவதையும், ஒளிவு மறைவு இல்லாமல் காண்பிப்பது வெள்ளையறிக்கை.

எத்தனை வருட தகவல்
இப்போது தமிழகம் நிதி சிக்கலில் தவித்து வருகிறது. எனவே, இந்த மாதம் துவங்க உள்ள (தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை) பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக நிதி நிலைமை குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். 2006ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்றபோது இருந்த நிதிநிலை நிலவரம் முதல் தற்போது உள்ள சூழல் வரை முழுமையான விவரங்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

5.5 லட்சம் கோடி கடன்
2011ம் ஆண்டு திமுக அரசு பதவியில் இருந்து வெளியேறும் போது மாநிலத்தின் கடன் 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், அடுத்து அதிமுக அரசு பொறுப்பேற்று 10 ஆண்டுகளில் இக்கடன் 5.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பண மதிப்பு நீக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் மாநில அரசின் நிதிநிலையில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

மக்களுக்கு நிவாரண உதவி
கொரோனா காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும், அரசின் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணம், 14 வகை பொருட்கள் அடங்கிய பை தருவதற்காக திமுக அரசு ரூபாய் 9,000 கோடி செலவிட்டுள்ளது. ஏழை எளியோர் கைகளுக்கு பணம் சென்று சேருவதுதான் பொருளாதாரத்திற்கு நல்லது என்ற அடிப்படையில் இந்த திட்டம் பொருளாதார வல்லுநர்களால் பாராட்டப்படுகிறது. அதேநேரம், மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (GST) நிதிப்பற்றாக்குறை 3%க்குள் இருக்க வேண்டும் என்ற வரம்பை அரசு கடந்து விட்டது என்கிறார்கள்.

மின் வாரியம், போக்குவரத்து கழகங்கள்
எனவே, தற்போதைய அரசின் நிதி நிலவரம் என்ன என்பது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ள வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றிருக்கும். இதை தவிர, அரசு நடத்தும் நிறுவனங்களான மின் வாரியம், போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்டவற்றின் நிதி நிலவரமும் தெரிய வரும். இந்த மோசமான சூழலை சரி செய்வது எப்படி என்பது தொடர்பான அறிவிப்புகளும் வெள்ளை அறிக்கையில் இடம் பெற வாய்ப்பு இருப்பதால், அதுகுறித்தும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

10 வருடங்கள் கழித்து
தமிழக சட்டசபையில் நிதிநிலைக் குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது இது முதல்முறை கிடையாது. 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பொன்னையன் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்தார். அதில், திமுக அரசின் தவறான நிர்வாகத்தால் நிதி நிலை மோசமாக இருப்பதாக பொன்னையன் விமர்சனம் செய்தார். இப்போது 10 வருடங்களுக்கு பிறகு வெள்ளையறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில், கடந்த 10 ஆண்டு காலத்தில் எவ்வளவு நிதிநிலைமை மோசமானது என்ற விமர்சனங்களும் கணிசமாக இருக்க கூடும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications