குலசைக்கு அடுத்த ஜாக்பாட்! 2000 ஏக்கரில் ’விண்வெளி உந்து சக்தி பூங்கா’ பட்ஜெட்டில் தங்கமான அறிவிப்பு
சென்னை: வான்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக குலசேகரப்பட்டினத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2024 - 2025 ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில் திருக்குறள் ஒன்றை வாசித்தார்.

தனது பட்ஜெட் உரையில், "காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் " குடிமக்கள் எளிதில் அணுகக் கூடியவராகவும் கடுமையான சொற்களை கூறாது ஆட்சி புரிந்து வரும் அரசனை உலகமே போற்றும். அது போல் கடைக் கோடி மக்களும் எளிதில் அணுகக் கூடியவராக உள்ள முதல்வர் ஸ்டாலினால் தமிழகத்திற்கே பெருமை என்று கூறினார்.
தொடர்ந்து தனது பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, திட்டங்களின் விரிவாக்கம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார். குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, ஆகிய 5 மாநகராட்சிகளில் உள்ள முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி, புதுமை பெண் திட்டம் விரிவாக்கம், பள்ளி மாணவர்களுக்கும் மாதம் தோறும் ஆயிரம் வழங்கப்படும் தமிழ் புதல்வன் திட்டத்தையும் அறிவித்தார்.

அதாவது, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும், இதன் மூலம் 6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ள நிலையில், பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியானது. தங்கம் தென்னரசு கூறுகையில், "விண்வெளி தளத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது. அதனையொட்டிய பகுதிகளில் வான்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications