மாடுகளை காப்பாற்றணும்.. உடனே தடுப்பூசி அனுப்புங்க! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சென்னை : தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கோமாரி நோய் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பருவமழைக் காலத்தில் கால்நடைகளைப் பாதிக்கும் கோமாரி நோய்களைத் தடுக்க கோமாரி தடுப்பூசிகள் செலுத்தப்படும். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இன்னும் தடுப்பூசிகளை அனுப்பாததால், மாடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோமாரி நோய் தடுப்பூசி வழங்கக் கோரி மத்திய கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கோமாரி தடுப்பூசி
பருவமழைக் காலங்களில் கால்நடைகளை கோமாரி என்னும் கொடிய நோய் தாக்குகிறது. கோமாரி நோய் தாக்கிய மாடுகளின் வாய் மற்றும் கால்களில் கொப்புளங்கள் ஏற்படும். உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் தீவனம் உண்ண முடியாமல் கால்நடைகள் இறந்துவிடும். எனவே, ஆண்டுதோறும் பசு, எருமை மாடுகளுக்கு கோமாரி நோய் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த ஆண்டு தடுப்பூசி போடவில்லை
பருவமழைக் காலத்தில் இந்நோய் அதிகம் தாக்குதல், மழைக் காலத்திற்கு முன் செப்டம்பர் மாதத்திலேயே தடுப்பூசிகள் போடப்படும். நவம்பரில் பருவமழை துவங்குவதற்கு முன்னதாக, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு விடும். ஆனால், இந்த ஆண்டு, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பு மருந்து மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என்பதால், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கோமாரி நோய் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (National Animal Disease Control Programme- NADCP) கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய்க்கு கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

90 லட்சம் தடுப்பூசிகள்
மேலும், கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதையும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பையும் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாடுகளின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரித்திட தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்கிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications