கிரிஜா வைத்தியநாதன் இன்று ஓய்வு- புதிய தலைமை செயலாளர் சண்முகம்-வென்றது எடப்பாடியாரின் பிடிவாதம்!
சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை செயலாளர் சண்முகத்தை நியமனம் செய்வதில் ஆளுநர் மாளிகை காட்டிய தாமதத்தை முதல்வர் எடப்பாடியாரின் பிடிவாதம் வென்றது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் காட்டிய பவ்யம் அனைவரும் அறிந்தது. அவரது மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசின் பிடி டெல்லிக்குப் போனது.
இதனைத் தொடர்ந்து டெல்லியின் பிரதிநிதியாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டு முதல்வரின் கோப்புகளை கூட நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது ஆகியவற்றை செய்யும் துணிச்சலுடன் வந்தவர் கிரிஜா வைத்தியநாதன். தமிழக அரசை கண்காணிக்கும் டெல்லி பிரநிதியாகவே அவர் இருந்து வந்தார்.
கிரிஜா வைத்தியான் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளர் குறித்த விவாதம் களைகட்டியது. ஆளுநரின் செயலாளராக இருக்கும் ராஜகோபால், நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் ஆகியோரில் சண்முகத்தை முதல்வர் தரப்பு பரிந்துரைத்து கோப்பை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் ஆளுநர் மாளிகையோ, ராஜகோபாலைத்தான் தலைமை செயலாளராக நியமித்தாக வேண்டும்; அப்போதுதான் தமிழக அரசு முழுமையாக டெல்லியின் பிடியில் இருக்கும் என தாமதம் காட்டி வந்தது. இதற்கு முதல்வர் தரப்பு விட்டுக் கொடுக்கவில்லை. முதல்வரை சமாதானப்படுத்த நடந்த முயற்சிகள் அத்தனையும் தோல்விதான்.
இதனையடுத்தே வேறுவழியே இல்லாமல் சண்முகத்தையே புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்ததாம் ஆளுநர் மாளிகை. கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகிய 4 முதல்வர்களின் நன்மதிப்பைப் பெற்றவர் சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.