தமிழை பயிற்று மொழியாக கொண்ட மாணவர்களுக்கு 12ம் வகுப்பு தேர்வு கட்டணம் ரத்து.. அதிரடி உத்தரவு
தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம், பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கட்டணத்தை வசூலித்து அதை வரும் 20ஆம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்திட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.

இதற்கேற்ப பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இரண்டாவது திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் தற்போது தமிழகம் முழுவதும் 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, எனவே நேரடியாக பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், 12ஆம் வகுப்பு தேர்வு கட்டண விகிதத்தில், தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பொதுத்தேர்வில் முதன்முறையாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போலவே அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் MBC, SC, ST, SCA மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணம் செலுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் விரைவில் பொதுத்தேர்வுகள் குறித்த அட்டவணையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications