முனுமுனுக்கும் ஐவர்.. அமைச்சர் பதவி தந்து .. அதிருப்தியாளர்களை வளைத்துப் போட முதல்வர் திட்டம்?
சென்னை: என்னதான் முழு மெஜாரிட்டி பெற்றுவிட்டாலும், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை திமுக அளித்ததில் இருந்து அதிமுக மேலிடம் அதிர்ச்சியில் தான் உள்ளது. இதனை முறியடிப்பதற்காக அதிருப்தி எம்எல்ஏக்கள் 5 பேருக்கு அமைச்சர் பதவி அளிப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்து வருகிறாராம்.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. 38 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரம் 22 தொகுதி இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தக்க வைத்துள்ளது.
என்ன தான் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டாலும் தேர்தலில் தோல்வி அடைந்ததால் முன்னாள் எம்பிக்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ராஜன் செல்லப்பா மற்றும் தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்டோரின் அதிருப்தி வெளிப்படையாக தெரிந்து வருகிறது.
அதிமுக ஆட்சிக்கு சிக்கல்
இது ஒரு புறம் எனில் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இன்னும் சில நாட்களில் சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை கூட்டம் கூட உள்ளது. இதனால் அப்போது சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும். எனவே இந்த தீர்மானத்தில் வெற்றி பெறாவிட்டால் அதிமுக ஆட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.
தனித்தனியாக பேச்சுவார்த்தை
இதை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று முன்தினம் சென்னைக்கு அதிருப்தி எம்எம்ஏக்களை அழைத்து தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு வந்தவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளாராம்.
அமைச்சரவை விரிவாக்கம்
அதிருப்தி எம்எல்ஏக்களை சமாளிக்க தேவைப்பட்டால் அமைச்சரவையை மாற்றவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளாராம். இதன்படி எம்எல்ஏக்கள் சிலருக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கவும் கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறதாம். குறிப்பாக தோப்பு வெங்கடாச்சலம், செம்மலை, ராஜன் செல்லப்பா மற்றும் டிடிவி அணியில் இருந்து வந்துள்ள பிரபு, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேருக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசித்து வருகிறாராம்.
அதிருப்தி எம்எல்ஏக்கள்
இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். அதேநேரம் அதிமுகவில் நிலவும் அதிருப்தியை முதல்வர் பழனிச்சாமி அமைச்சர் பதவி என்ற ஆயுதத்தை எடுத்தால் அது இன்னும் சிக்கலையே ஏற்படுத்தும் என்கிறார்கள். ஏனெனில் அமைச்சர் பதவி கேட்டு காத்திருப்பது பலர், இப்போது சிலருக்கு மட்டும் அளித்தால் நிச்சயம் அது அதிருப்தியை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள்.