'கொரோனா 3-வது அலை வேண்டாம் மக்களே.. விழிப்புடன் கவனமா இருங்க'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து 60 நாளுக்கும் மேலாக கொரோனா குறைந்து வந்தது. இதனால் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த தளர்வுகள் கொரோனா தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
தொடர்ந்து 2-வது நாளாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. சென்னை உள்பட 19 மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளது கவலையை எற்படுத்தி இருக்கிறது.
ஊரடங்கு நீட்டிப்பு
இதற்கிடையே ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி வரை மேலும் தளர்வுகள் ஏதும் கொடுக்காமல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் கொரோனா அதிகரிப்பதால் 9 இடங்களில் மால்கள், அங்காடிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு மாவட்டங்களும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மூன்றாம் அலையை தவிர்க்க, கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மூன்றாம் அலை
மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்கவேண்டும். வருமுன் காத்தலே விவேகம்; இது நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம். மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
அரசுக்கு ஒத்துழையுங்கள்
பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.