மதுரை குலுங்க குலுங்க.. இன்று வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! ஹை அலர்ட்டில் போலீஸ் - பிளான் என்ன?
சென்னை: மேம்பால கட்டுமானப் பணிகள் தொடக்கம், முத்துராமலிங்க தேவர் குருபூஜை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்ச மு.க. ஸ்டாலின் இன்று இரவு மதுரை வர இருப்பதை அடுத்து பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஆண்டுதோறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நாளை (அக்டோபர் 30) முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் இன்று இரவு மதுரை வருகிறாா்.

மதுரைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வர இருப்பதை அடுத்து இன்றும் நாளையும் மதுரையில் ட்ரோன் கேமராக்களை இயக்கத் மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனா்.
இதனை அடுத்து, மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் ட்ரோன் கேமராக்களை இயக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவை கண்காணிக்க காவல் துறை, வருவாய்த் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது." என்றாா். இன்று இரவு மதுரை வரும் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு விருந்தினா் மாளிகையில் தங்குகிறாா். நாளை காலை 7 மணியளவில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக சிவகங்கை சாலையில் அமைந்து உள்ள ஆவின் பால் பண்ணை அருகே நடைபெற இருக்கும் விழாவில் பங்கேற்கும் ஸ்டாலின், கோரிப்பாளையம் மேம்பாலம், மற்றும் அப்போலோ சந்திப்பு உயா்மட்ட பாலம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைக்க இருக்கிறாா். அந்த நிகழ்ச்சி முடிந்த பின் நாளை காலை 7.45 மணியளவில் மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள மருதுபாண்டியா்கள் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதன் பிறகு, அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்குப் புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளார்.












Click it and Unblock the Notifications