"உங்களால் முடியுமா?".. சட்டசபையிலேயே திடீர் கேள்வி கேட்ட முதல்வர்.. ஜெர்க் ஆன பாஜக.. பரபர சம்பவம்
சென்னை: பாஜக உறுப்பினர்களை பார்த்து முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி இன்று தமிழ்நாடு சட்டசபையில் கவனம் பெற்றது. நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்று முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்.
Recommended Video
தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு, நீட் தேர்வின் பாதகங்கள் முறையாக ஆராயப்பட்டு வருகின்றன. இந்த கமிட்டி கொடுக்கும் அறிக்கையில் அடிப்படையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட உள்ளது.
இதற்காக தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந்து, குடியரசு தலைவர் ஒப்புதலோடு நீட் விலக்கை பெறும் முடிவில் உள்ளதாக தெரிகிறது.
விவாதம்
இந்த நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சியினரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். முக்கியமாக ஒன்றிய அரசு என்று அழைப்பது ஏன் என்று விளக்கம் அளித்தார். அதோடு கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மூன்றாம் அலைக்காக செய்யப்பட்டு இருக்கும் ஏற்பாடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
நீட்
இதில் நீட் தேர்வு குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன, இதில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர், நீட் தடைதான் எங்களின் நோக்கம்.
விலக்கு
நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கேட்பதுதான் எங்களின் நிலைப்பாடு. தொடக்கத்தில் இருந்து இதை மட்டுமே நாங்கள் முன்வைத்து வருகிறோம். இதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்றுதான் விளக்கம் தேவை. நாங்கள் நீதிக்கு எதிராக செயல்பட்டால் அதை பாஜக ஆதரிக்குமா? தமிழ்நாடு அரசின் குரலுக்கு பாஜக ஆதரவு அளிக்குமா? உங்களால் முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
ஜெர்க்
இதை எதிர்பார்க்காத பாஜக உறுப்பினர்கள் கொஞ்சம் ஜெர்க் ஆனார்கள். இதையடுத்து பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சட்டத்திற்குட்பட்டு செயல்பட்டால் நாங்கள் ஆதரவு அளிப்போம், சட்டத்திற்கு உட்பட்டு நீட் விலக்கிற்கு குரல் கொடுக்க தயார் என்று குறிப்பிட்டார். நீட் விலக்கிற்கு சட்டத்திற்கு உட்பட்டு ஆதரவு அளிப்போம் என்று பாஜக திடீரென அறிவித்து இருப்பது கவனத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு கட்சிகள் இதில் வேற்றுமையை கடந்து ஒன்றாக இணைகிறதோ என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.