சூப்பரா மாறப்போகும் மெரினா-கோவளம் கடற்கரை.. ரூ.100 கோடி ஒதுக்க்கீடு - 17 பேர் குழுவை அமைத்து அரசாணை!
சென்னை : சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்பரப்பினை 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மெரினா முதல் கோவளம் வரை 30 கி.மீ தூரமுள்ள கடற்கரை பகுதியை மறுசீரமைத்து புதுப்பொலிவாக்கும் திட்டத்திற்காக 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசின் வீட்டு வசதித்துறை செயலாளர் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வீட்டு வசதித்துறை மீதான மானிய கோரிக்கையின்போது, மெரினா முதல் கோவளம் வரையிலான 30 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை பகுதி ரூ.100 கோடியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மறுசீரமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டிருந்தார்.

அரசு ஒப்புதல்
இந்நிலையில், சென்னை கடற்கரை பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் திட்டத்தின் கீழ் சிறப்பு நோக்கு நிறுவனம் உருவாக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரையிலான 30 கி.மீ கடற்பரப்பினை மேம்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து, 17 பேர் கொண்ட மறுசீரமைக்கும் குழுவையும் அமைத்துள்ளது.

அரசாணை
இதுதொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ஹித்தேஷ்குமார் மக்வானா வெளியிட்டுள்ள அரசாணையில், "சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னையின் கடற்கரைப் பகுதி எண்ணூர் முதல் கோவளம் வரையில் நீண்டுள்ளது. இயற்கையான நீண்ட கடற்கரைப் பகுதியான இதை பருவகால மாற்றத்தின் அடிப்படையில் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகள் மக்கள் அதிகளவில் பொழுதுபோக்குக்காக கூடும் பகுதிகள். இவை தவிர மேலும் 20 பகுதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். கடல் அரிப்பு மற்றும் மண் குவியல் இந்த கடற்கரைப் பகுதிகளில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ரூ. 100 கோடி ஒதுக்கீடு
குறிப்பாக 3 கி.மீ பகுதி, கடல் அரிப்பாலும், 7 கி.மீ பகுதி மண் குவியலாலும் பாதிக்கப்படும் என்று 2018-ம் ஆண்டு தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால், சென்னை கடற்கரைப் பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கம் (சி.எஸ்.ஆர்.ஆர்) என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தற்போது மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்பகுதி ரூ.100 கோடியில் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

என்னென்ன அமைக்கப்படும்
இதன்படி, இப்பகுதியில் மரத்தால் ஆன நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. மேலும் மக்கள் பங்களிப்பின் அடிப்படையிலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த தனித்துவமான நிர்வாக அமைப்புடன் கூடிய சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உறுப்பினர் செயலாளர் பரிந்துரைத்துள்ளார். இதை பரிசீலித்த தமிழக அரசு, ரூ.100 கோடியில் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்க முன் அனுமதியளித்துள்ளது.

17 பேர்
அந்த சிறப்பு நோக்கு அமைப்பில், வீட்டுவசதித்துறை செயலாளரை தலைவராகவும், வனத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், டுபிட்கோ தலைவர் உள்ளிட்ட 15 பேரை உறுப்பினர்களாகவும், பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளரை தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளது. திட்டத்துக்கான ஒப்பந்தம் கோருதல் உள்ளிட்ட பணிகளை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளர் மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications