சென்னை உட்பட 10 மாவட்டங்கள்.. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவையாக அறிவித்து அரசிதழில் வெளியீடு!
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை புயல் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகியவை வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல், வட தமிழக கடலோர பகுதிகளுக்கு நெருக்கமாக நிலை கொண்டிருந்ததால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3, 4ஆம் தேதிகளில் பயங்கர கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான கீழடுக்கு வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் வரலாறு காணாத அளவில் அதிகனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
டெல்லி சென்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து எடுத்துரைத்தார். மேலும், ஏற்கெனவே மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய கோரியபடி, தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12,659 கோடியும் விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதோடு, பேரிடரால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு அவசர நிவாரண நிதியாக ரூ.2,000 கோடியை விரைந்து வழங்குமாறும் பிரதமரை வலியுறுத்தினார். மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட குழுவினர் தமிழ்நாட்டில், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டுச் சென்றனர். தமிழ்நாடு மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6,000 நிவாரண உதவி தமிழக அரசால் வழங்கப்பட்டது. மேலும், உயிர் பலி, படுகாயம், வீடுகள் இழப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை புயல் பாதித்த மாவட்டங்களாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை வெள்ளம் பாதித்த மாவட்டங்களாகவும் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications