வேதா நிலையம் விவகாரத்தில் மேல்முறையீடு இல்லை- தமிழக அரசு விளக்கம்
சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ஏற்கனவே நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்ததாகவும், மேலும் நீதிபதி சேஷசாயியும் அதேபோல் உத்தரவிட்டதால், மேல்முறையீடு செய்யவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் நினைவு இல்லமாக மாற்றும் வகையில், கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு தாக்கல் செய்ய செய்ய அதிமுகவிற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு, அறிவித்ததை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

வேதா நினைவில்லம்
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பது பொதுப்பயன்பாடும் இல்லை என்றும், ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவில்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறி, வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து கடந்த 24ம் தேதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேபோல், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மேல்முறையீடு
வேதா நிலையம் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்ய அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல் முறையீடு செய்ய உரிமை உள்ளதாகவும், அதனால் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள்,பரேஷ் உபத்தாயா,சத்திகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மேல்முறையீடு மனு
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுக சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டனர் அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது சி.வி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி வாதிட்டார்.அவர் தனது வாதத்தில் தனி நீதிபதி வழக்கை தவறாக அணுகியுள்ளார் என்றும் பொதுமக்கள் பயன்பாடு என்பதை அரசுதான் முடிவு செய்யவேண்டும் நீதிமன்றம் அல்ல என்று குறிப்பிட்டார்.மற்ற தலைவர்களோடு ஒப்பிட்டு அளவுகோலை பயன்படுத்தியிருப்பது அதிகாரவரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும், ஜெயலிலதா ஆறு முறை முதல்வராக இருந்து மதிய பல்வேறு மக்கள் நலதிட்டங்களை கொண்டுவந்தவர் என்றும் தமிழகத்தை பொறுத்தவரை ராஜாஜி,காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நினைவிடம், சிலை, வாழ்ந்த இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டது என பல இடங்கள் உள்ளதாகவும் எனவே ஜெயலலிதாவுக்கு ஒரு நினைவிடம் போதும் என நீதிமன்றம் சொல்லமுடியாது என வாதிட்டார்.

சாவிகள் ஒப்படைப்பு
தீபக் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தேரசன் ஆஜராகி, இந்த வழக்கு நடைபெற்றக்கொண்டிருந்தபோது மனுதாரர் இந்த வழக்கில் தன்னையும் இணைத்து வாதிடவில்லை என்றும், சாவிகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். தீபா தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு, ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியில் அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனவும், எட்டு வாரங்களில் தமிழக அரசு இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

நினைவு இல்லம்
மேலும்,வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசியமில்லை, ஜெயலலிதா இல்லத்தின் ஒரு பகுதியை வேண்டுமானால் நினைவிடமாக்கலாம் எனவும், மற்றபடி அவரின் இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்றலாம் என்றும் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தனர் என்று சுட்டிக்காட்டினார். மேலும் நீதிபதி சேஷசாயி வேத இல்லத்தை நினைவிடமாக மாற்றக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுகளை பரசீலித்ததன் அடிப்படையிலேயே தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை,சாவியும் தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications