ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதா... ஆளுநர் ரவி ஒப்புதல்
சென்னை: ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சட்ட மசோதா அரசிதழில் வெளியிடடப்பட்டு அமலுக்கு வர உள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தற்கொலைகள் அதிகரித்து வந்ததையடுத்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்து வந்தது.
செப்டம்பர் 26ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகத்தில் அதிக அளவில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த வகை விளையாட்டுகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் அக்டோபர் மூன்றாம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

சட்டசபையில் மசோதா தாக்கல்
இந்நிலையில் அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதற்கான மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார்.அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விபரம்
மேலும் இதுகுறித்த விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி விளம்பரங்களை வெளியிடும் நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் சூதாட்டத்தில் ஈடுபவர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
ஒருமுறை தண்டனை பெற்று மீண்டும் மீண்டும் அதே தவறில் ஈடுபடும் நபர்களுக்கு கூடுதல் அபராதமும் சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications