தமிழ்நாடு மாநிலம் உருவான நாள்.. வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ரவி! சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாடு மாநிலம் உருவான நாளையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் காண வழிவகுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார் ஆளுநர் ரவி.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள செய்தியில், "தமிழ்நாடு மாநிலம் உருவான தினத்தையொட்டி, நமது தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தமிழ்நாடு, தனது வளமான ஆன்மிகம், கலாசாரம், இலக்கிய பாரம்பரியம் கொண்ட பாரதத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை மகத்தான முறையில் வடிவமைத்துள்ளது. இந்த புனித பூமியின் முனிவர்கள், ஞானம் தேடுவோர், கவிஞர்கள் மற்றும் வீரம் மிக்க ஆட்சியாளர்கள் எல்லா காலங்களிலும், பாரதத்தின் ஆன்மாவை வளப்படுத்தி, அதன் அன்பு மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தின் செய்தியை கடல் கடந்து கொண்டு சென்றுள்ளனர்.

இந்த மண்ணின் எண்ணற்ற தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அசைக்க முடியாத உறுதி மற்றும் அவர்களின் வீரமும், தியாகமும் நமது நாட்டின் சுதந்திரத்துக்கும் துடிப்பான ஜனநாயகத்துக்கு வழிவகுத்துள்ளன. இந்த நாளில், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் காண வழிவகுக்கும் தமிழ்நாட்டின் இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக உழைப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான் & நிகோபார், டெல்லி, சண்டிகர், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவை உருவான தினத்தை முன்னிட்டு அன்பான நல்வாழ்த்துக்கள். இன்று, இந்தியாவின் துடிப்பான பன்முகத்தன்மையை நாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு பிராந்தியமும் நமது தேசக்களஞ்சியத்துக்கு தனித்துவ பங்களிப்பை வழங்கி ஒரே குடும்பமாக ஒற்றுமை எனும் உள்ளார்ந்த வலிமையை பிரதிபலிக்கிறது.
ஒரே தேசமாக பாரதம் என்ற உணர்வோடு ஊறிப்போன நமது அடையாளத்தை வரையறுக்கும் நமது அற்புதமான பன்முகத்தன்மையை வளர்த்தெடுப்போம். பாரதத்தின் முன்னேற்றம், அமைதி மற்றும் வளத்துக்கான சக்திவாய்ந்த தூண்களாக அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தொடர்ந்து செழித்தோங்கட்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் 1ஆம் தேதியை தத்தமது மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அரசாணை வெளியிட்டார்.
சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்ற 1968 ஜூலை 18 ஆம் தேதி அன்றைய முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன்படி ஜூலை 18 ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என 2022 ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஜூலை 18 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
எனினும், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, புதிதாக விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இன்றே தமிழ்நாடு நாளை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு உருவான தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். எனினும், ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு நாள் என்ற பதம் இடம்பெறவில்லை. தமிழக அரசின் நிலைப்பாடு காரணமாகவே ஆளுநர் ரவி, தமிழ்நாடு நாள் என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடவில்லை எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications